துபாய்: 2025 ஆசியக் கோப்பை தொடரில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் குரூப் சுற்றுப் போட்டி, களத்திற்கு வெளியே பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவைப் புறக்கணித்து இருந்தார். அதற்கு உண்மையான காரணம் என்ன? என பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெசன் அதிகாரப்பூர்வமாக விளக்கம் கொடுத்துள்ளார். நடந்தது என்ன?
இந்தப் போட்டி முடிந்த பிறகு களத்தில் இருந்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவும், அவருடன் இருந்த சிவம் துபேவும் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் நேராக வீரர்கள் அறைக்குத் திரும்பினர். இதைக் கண்டு திகைத்த பாகிஸ்தான் வீரர்கள், கைகுலுக்குவதற்காக சிறிது நேரம் காத்திருந்தனர். ஆனால், இந்திய அணி சார்பில் யாரும் வெளியே வராததால் அதிருப்தி அடைந்தனர்.

இதைத் தொடர்ந்து, பரிசளிப்பு விழா நடைபெற்றபோது, பாகிஸ்தான் அணியின் சார்பாக ஷஹீன் அஃப்ரிடி ஒரு விருதைப் பெற வந்திருந்தாலும், கேப்டன் சல்மான் அகா விழாவிற்கு வரவே இல்லை.
இந்தச் சம்பவம் குறித்து போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய மைக் ஹெசன், இந்திய வீரர்களின் செயலுக்குத் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.
"நாங்கள் போட்டியின் முடிவில் கைகுலுக்கத் தயாராகவே இருந்தோம். எதிரணி வீரர்கள் அப்படிச் செய்யாதது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நாங்கள் கைகுலுக்கச் சென்றபோது, அவர்கள் ஏற்கனவே தங்கள் அறைக்குச் சென்றுவிட்டனர். போட்டி முடிந்த விதம் ஏமாற்றமளித்தது. நாங்கள் விளையாடிய விதம் குறித்து எங்களுக்கு ஏமாற்றம் இருந்தாலும், நாங்கள் நிச்சயமாக கைகுலுக்கத் தயாராகவே இருந்தோம்" என்றார் ஹெசன்.
சல்மான் அகா விழாவைப் புறக்கணித்தது குறித்துக் கேட்டபோது, "இந்திய வீரர்கள் கைகுலுக்க முன்வராததன் விளைவாகவே, அதன் தொடர்ச்சியாகவே சல்மான் அகா பரிசளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை என்று நான் நினைக்கிறேன். கைகுலுக்கல் நடக்கவில்லை, அத்துடன் அது முடிந்துவிட்டது," என்று கூறி, இந்திய வீரர்களின் செயலுக்கு நேரடி எதிர்வினையே பாகிஸ்தான் கேப்டனின் புறக்கணிப்பு என்பதைத் தெளிவுபடுத்தினார்.
முன்னதாக, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்த வெற்றியை பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்திய இந்திய ராணுவத்திற்கும் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்திருந்தார். மேலும், "விளையாட்டு உணர்வையும் விட சில விஷயங்கள் வாழ்க்கையில் முக்கியமானவை" என்று அவர் கூறியது, கைகுலுக்கலைத் தவிர்த்ததற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.