டம்புல்லா : மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் நடைபெறுகிறது. இலங்கையில் நடைபெறும் இந்த தொடரில் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பங்கேற்கின்றன. ஆசிய கோப்பையை ஏழு முறை வென்றுள்ள இந்திய அணி நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் களமிறங்குகிறது.
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, நேபால் அணிகளும் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு செல்லும்.

இந்தியா பாகிஸ்தான் அணிகள் இதுவரை 14 முறை மோதி இருக்கின்றன. இதில் 11 முறை இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. பாகிஸ்தான் அணி மூன்று முறை வெற்றி பெற்றிருக்கிறது. ஆசிய கோப்பை வரலாற்றில் இந்தியா பாகிஸ்தான் ஆறு முறை மோதி இருக்கின்றன. இதில் இந்தியா ஐந்து முறையும் பாகிஸ்தான் ஒரு முறையும் வெற்றி பெற்று இருக்கிறது.
இந்திய மகளிர் அணியை பொறுத்தவரை தற்போது தென்னாப்பிரிக்காவை ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி டி20 போட்டியில் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. ஆனால் பாகிஸ்தான் மகளிர் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வியை தழுவி விட்டது. ஹர்மன்பிரித் கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஸ்மிருதி மந்தானா, தீப்தி சர்மா, ராதா யாதவ், பூஜா, ஜெமிமா ரோட்ரிகியூஸ், ரேணுகா தாகூர் தயாளன் ஹேமலதா, ராதா யாதவ், சஞ்சனா சஜ்வின் போன்ற வீராங்கனைகள் இடம் பிடித்திருக்கிறார்கள்.
டி20 கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறும் இந்த தொடர் நாளை வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு இலங்கையில் உள்ள தம்புலா நகரில் நடைபெறுகிறது. தொலைக்காட்சியில் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும், ஆன்லைனில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பிலும் பார்க்கலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை துபாயை எதிர்கொள்ளும் இந்திய அணி வரும் செவ்வாய்க்கிழமை நேபாளம் அணியை லீக் சுற்றில் எதிர்கொள்கிறது.