கொழும்பு: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான 2025 மகளிர் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நஷ்ரா சந்து, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரை முறைத்துப் பார்க்க, அதற்கு ஹர்மன் கொடுத்த 'கூல்' பதிலடி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் மட்டுமின்றி போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய இன்னிங்ஸின் 22-வது ஓவரின்போது குறிப்பிட்ட அந்த சம்பவம் நடைபெற்றது. அந்த ஓவரை பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நஷ்ரா சந்து வீசினார்.
அந்த ஓவரின் கடைசிப் பந்தை ஹர்மன்பிரீத் கவுர் நேராக பேட் செய்ய, அதைத் தடுத்த நஷ்ரா சந்து, பந்தை கையில் வைத்துக்கொண்டே, ஹர்மன்பிரீத் கவுரை ஆக்ரோஷமாக முறைத்துப் பார்த்தார். இது பேட்ஸ்மேனைத் தவறு செய்ய வைக்கும் ஒரு பொதுவான உளவியல் தந்திரமாகும்.
ஆனால், அனுபவசாலியான ஹர்மன்பிரீத் கவுர், சந்துவின் இந்தச் செயலுக்குச் சற்றும் அசரவில்லை. ஆக்ரோஷமாகப் பதிலளிக்காமல், சற்றும் பதற்றப்படாமல், அவரை விடத் தீர்க்கமாக, அமைதியாக அவரைத் திரும்ப முறைத்துப் பார்த்தார். அந்தப் பார்வையில், "இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன்" என்ற செய்தி தெளிவாகத் தெரிந்தது. சில நொடிகள் நீடித்த இந்த 'முறைத்தல் யுத்தத்திற்குப்' பிறகு, ஹர்மன் இயல்பு நிலைக்குத் திரும்பினார்.
களத்தில் நடந்த இந்தச் சுவாரஸ்யமான மோதலின் வீடியோ காட்சி, இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஹர்மன்பிரீத் கவுரின் இந்த 'மாஸ்' பதிலடிக்கு இந்திய ரசிகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

கொழும்பு மைதானத்தின் மெதுவான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட்களை வரிசையாக இழந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 34 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். அவர் ஹர்லீன் தியோலுடன் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்த்தார்.
ஹர்லீன் தியோல் நிதானமாக ஆடி 46 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் ரிச்சா கோஷின் அதிரடி ஆட்டம் கை கொடுத்தது. ரிச்சா 20 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியின் டாஸின் போது, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனாவுடன் கை குலுக்கவில்லை. ஆசியக் கோப்பையின் போது இந்திய ஆடவர் அணி கடைப்பிடித்த அதே நடைமுறையைத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.