கொழும்பு: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய 2025 மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின்போது ரன் அவுட் சர்ச்சை எழுந்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனை முனீபா அலி ரன் அவுட் செய்யப்பட்ட விதம் ஐசிசியின் விதிகள் குறித்த பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. மூன்றாவது அம்பயர் முதலில் நாட் - அவுட் என அறிவித்து விட்டு பின்னர் அவுட் என கூறினார்.
இந்தப் போட்டியின் நான்காவது ஓவரில், இந்திய வீராங்கனை கிராந்தி கௌட் வீசிய பந்தை முனீபா அலி எதிர்கொண்டார். முதலில் இந்திய அணி சார்பில் எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்யப்பட்டது. அது நிராகரிக்கப்பட்ட அதே சமயம், முனீபா அலியின் பேட் காற்றில் இருந்தது. அதை பார்த்த உடன் மின்னல் வேகத்தில் செயல்பட்ட தீப்தி ஷர்மா, பந்தை எடுத்து ஸ்டம்பை நோக்கி எறிந்து ரன்-அவுட் அப்பீல் செய்தார்.
மூன்றாவது நடுவரின் ரீப்ளேவில், பந்து ஸ்டம்பைத் தாக்கும்போது, முனீபா அலியின் பேட் க்ரீஸ் கோட்டிற்கு உள்ளேதான் இருந்தது. ஆனால், அது தரையில் படாமல், சற்று காற்றில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. அவர் பேட்டை க்ரீஸுக்குள் வைத்துவிட்டு, மீண்டும் லேசாகத் தூக்கிய அந்த நொடியில் பந்து ஸ்டம்பைத் தாக்கியிருந்தது. முதலில் இதை சரியாக பார்க்காமல் நாட் அவுட் என்று நேரலையில் கூறிய மூன்றாவது அம்பயர், பின்னர் மீண்டும் ரீப்ளே செய்து பெயில்ஸ் தகர்க்கப்படும் போது பேட் எங்கே இருந்தது என்பதை பார்த்தார். இதைத் தொடர்ந்து, மூன்றாவது நடுவர், விதிகளின்படி 'அவுட்' என அறிவித்தார்.
இந்த அவுட், முனீபா அலிக்குத் ஏமாற்றத்தை அளித்தது. அவர் வெளியே சென்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா ஆடுகளத்திற்கு வெளியே நின்று இருந்த நான்காவது அம்பயருடன் ஐசிசி விதி குறித்து வாக்குவாதம் செய்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பேட்ஸ்மேனின் பேட் க்ரீஸ் கோட்டிற்குள் இருந்தால் போதும், அது தரையில் படாவிட்டாலும் நாட்-அவுட் வழங்கப்படும். ஆனால், ஐசிசி இந்த விதியில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. அந்த மாற்றம்தான் இங்கே சர்ச்சையாக மாறி உள்ளது.
ஐசிசி விதி 30.1.1 (ICC Law 30.1.1)-ன் படி ஒரு பேட்ஸ்மேனின் உடலின் அல்லது பேட்டின் ஏதேனும் ஒரு பகுதி, பாப்பிங் க்ரீஸுக்குப் பின்னால் தரையில் ஊன்றப்பட்டிருந்தால் தவிர, அவர் க்ரீஸுக்கு வெளியே இருப்பதாகவே கருதப்படுவார்."
விதி 30.1.2-ல் உள்ள விதிவிலக்கு (Exception)-ன் படி ஒரு பேட்ஸ்மேன் தனது க்ரீஸை நோக்கி 'ஓடும்போதோ அல்லது டைவ் அடிக்கும்போதோ', அவரது பேட் அல்லது உடலின் ஒரு பகுதி க்ரீஸைத் தாண்டி தரையில் ஊன்றப்பட்டு, அதன் பிறகு தரைக்கும் அவரது பேட்/உடலுக்கும் இடையே தொடர்பு அறுபட்டால், அவர் அவுட் இல்லை.

இங்கேதான் முக்கியத் திருப்பம் ஒன்று உள்ளது. முனீபா அலி ரன்னுக்காக 'ஓடவோ அல்லது டைவ் அடிக்கவோ' இல்லை. அவர் எல்.பி.டபிள்யூ அப்பீலுக்குப் பிறகு, சாதாரணமாக க்ரீஸுக்குள் திரும்பி வந்து பேட்டை ஊன்றிவிட்டு, அதை லேசாகத் தூக்கியுள்ளார். எனவே, அவருக்கு விதி 30.1.2-ல் உள்ள விதிவிலக்கு பொருந்தாது.
அவருக்குப் பொருந்தக்கூடியது அடிப்படை விதியான 30.1.1 மட்டுமே. அதன்படி, பந்து ஸ்டம்பைத் தாக்கும்போது, அவரது பேட் அல்லது உடலின் ஏதேனும் ஒரு பகுதி கட்டாயம் தரையில் ஊன்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முனீபாவின் பேட் அந்த நொடியில் காற்றில் இருந்தது. எனவே, நடுவர் விதிகளின்படி மிகச் சரியாக 'அவுட்' கொடுத்துள்ளார்.