கொழும்பு: பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாத்திமா சனா. கொழும்பில் இன்று நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் நிலையில், போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் சவால் விடும் வகையில் பேசி இருக்கிறார். இந்தியாவிடம் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. அது பற்றி கேட்ட போது தான் அவர் சவால் விடுத்துள்ளார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவிடம் பாகிஸ்தான் 11-0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மோசமான சாதனையைச் சுட்டிக்காட்டி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சற்றும் சளைக்காமல் பாத்திமா பதிலளித்தார்.
"முதலாவதாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே என்ன சாதனைகள் இருந்தாலும், அவை உடைக்கப்படுவதற்காகத்தான் இருக்கின்றன. பாகிஸ்தான் ஒருபோதும் அவர்களை வெல்லாது என்று அர்த்தமல்ல. எங்கள் எதிரணி யார் என்பதைப் பற்றி கவலைப்படாமல், சிறந்த கிரிக்கெட்டை விளையாடுவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, நாங்கள் வரலாற்றைப் பற்றி சிந்திக்கப் போவதில்லை; நாங்கள் விளையாடும் அந்த இன்றைய நாளைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்துவோம்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், "பாகிஸ்தான் அணி, எந்தவொரு பெரிய அணியையும் சிறப்பாக விளையாடி வீழ்த்தும் திறனைக் கொண்டுள்ளது என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். அதனால், ஒரேயொரு போட்டியை வைத்து உங்களை நீங்களே எடைபோட முடியாது. அணியில் அனைவரின் மன உறுதியும் உயர்வாக உள்ளது" என்று தனது அணியினருக்கு நம்பிக்கை ஊட்டினார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆடவர் ஆசிய கோப்பையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், மகளிர் அணிகளுக்கு இடையேயான உறவு மற்றும் போட்டி அணுகுமுறை குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பாத்திமா, இரு அணி வீராங்கனைகளுக்கு இடையேயான உறவு சுமூகமாகவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
"எங்களது முக்கிய நோக்கம் சிறப்பாக விளையாடுவதுதான். மற்ற அணிகளுடன் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. விளையாட்டின் மாண்பை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம். முன்பு பிஸ்மாவின் மகளுடன் அனைவரும் ஒன்றாகக் கலந்து பழகி மகிழ்ந்ததைப்போல, வீரர்களாகிய நாங்கள் அனைவரும் அப்படிப்பட்ட தருணங்களை விரும்புகிறோம். ஆனால், நாங்கள் எதற்காக இங்கு வந்துள்ளோமோ, அதில் கவனம் செலுத்துவதுதான் முக்கியம்" என்றார்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ஏற்படும் அதீத அழுத்தம் குறித்துப் பேசிய அவர், "நிச்சயமாக, இது அதிக அழுத்தம் நிறைந்த ஒரு போட்டி. இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை முழு உலகமும் பார்க்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், அந்த அழுத்தத்தைக் கையாள்வதுதான் முக்கியம். நாங்கள் அதில் கவனம் செலுத்தி, எங்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தி, எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். ஒரேயொரு போட்டியை வைத்து ஒரு தொடரை நீங்கள் வரையறுக்க முடியாது. எங்களால் இன்னும் போட்டிகளை வெல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று கூறினார்.
வரலாறு இந்தியாவுக்குச் சாதகமாக இருந்தாலும், பாகிஸ்தான் கேப்டனின் இந்தத் துணிச்சலான மற்றும் நம்பிக்கையான பேட்டி, இன்றைய போட்டிக்கு மேலும் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.