கொழும்பு: பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங் எப்போதுமே சமூக வலைதளங்களில் ஒரு கிண்டல் பொருளாக இருந்து வரும் நிலையில், கொழும்பில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2025 மகளிர் உலகக் கோப்பை போட்டியின்போது, அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் ஒரு 'காமெடி கூத்து' அரங்கேறியுள்ளது.
இந்திய இன்னிங்ஸின் கடைசி ஓவரில், இரண்டு பாகிஸ்தான் வீராங்கனைகள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு, மிக மிகச் சுலபமான ஒரு கேட்ச்சை கோட்டை விட்ட சம்பவம், தற்போது இணையத்தை சிரிப்பலையில் மூழ்கடித்துள்ளது.
இந்திய இன்னிங்ஸின் கடைசி ஓவரை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் டயானா பெய்க் வீச வந்தார். ஓவரின் மூன்றாவது பந்தை ரிச்சா கோஷ் தவறாக அடிக்க, பந்து உயரமாகக் காற்றில் பறந்தது. அப்போதுதான் அந்தக் கோட்டைவிடுதல் சம்பவம் அரங்கேறியது.
விக்கெட் கீப்பர் சித்ரா நவாஸ், "கேட்ச் என்னுடையது" என்று கத்திக்கொண்டே பந்தைப் பிடிக்க வலதுபுறம் ஓடினார். அதே சமயம், பேக்வர்ட் பாயிண்ட்டில் இருந்து ஃபீல்டர் நடாலியா பர்வைஸும் பந்தைப் பிடிக்க வேகமாக ஓடி வந்தார். இருவரில் ஒருவர் கூட விட்டுக் கொடுக்கவில்லை.
கடைசி நேரத்தில், இரண்டு பேரும் லேசாக மோதிக்கொண்டனர். விக்கெட் கீப்பர் நவாஸின் கையுறையில் பட்டு, அந்தச் சுலபமான கேட்ச் கீழே விழுந்தது. இந்த குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய வீராங்கனைகள் ஒரு சிங்கிள் ஓடினர்.

இந்த கேட்ச் டிராப் செய்யப்பட்ட வீடியோ வெளியான நொடியிலிருந்து, ரசிகர்கள் பாகிஸ்தான் அணியைக் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். "இதுதான் கிளாசிக் பாகிஸ்தான் ஃபீல்டிங்," என்றும், "ஒரு கேட்ச்சை பிடிக்க இரண்டு பேர் தேவைப்படும் ஒரே அணி பாகிஸ்தானாகத்தான் இருக்கும்," என்றும் கமெண்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம், பாகிஸ்தான் ஃபீல்டிங்கின் "கல்ட் கிளாசிக்" தருணங்களில் ஒன்றாக மாறிவிட்டது.
இந்தச் சொதப்பலுக்குப் பிறகு, பந்துவீச்சாளர் டயானா பெய்க் அடுத்த இரண்டு பந்துகளில், கிராந்தி கௌட் மற்றும் ரேணுகா சிங் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து, இந்திய அணியை 247 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆக்கினார். இந்தப் போட்டியின் முடிவில், இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.