கொழும்பு: 2025 மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டியில், பலம் வாய்ந்த இந்திய அணியின் அனைத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பாகிஸ்தான் மகளிர் அணி வரலாறு படைத்துள்ளது. இந்திய அணி இந்தப் போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், பாகிஸ்தான் அணி சிறிய ஆறுதலாக இந்த வரலாற்று சாதனையை படைத்து இருக்கிறது. மகளிர் ஒருநாள் சர்வதேசப் போட்டி வரலாற்றில், பாகிஸ்தான் அணி இந்திய அணியை ஆல்-அவுட் செய்வது இதுவே முதல் முறையாகும்.
உலகக் கோப்பை போட்டியில் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்தியா மகளிர் அணி விக்கெட்களை இழந்தாலும் அதிக ஸ்கோரை எடுத்து வென்றது.
கொழும்பு, ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கம் முதலே இந்திய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள், சரியான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தனர்.

இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் உள்ளிட்டோரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் கொடுத்த சிறப்பான தொடக்கத்தை, அடுத்து பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர்கள் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டனர். குறிப்பாக, கேப்டன் பாத்திமா சனா, டயானா பெய்க், நஷ்ரா சந்து மற்றும் சாடியா இக்பால் ஆகியோர் இந்திய விக்கெட்களை வரிசையாக சாய்த்தனர்.
எனினும், இந்திய அணி சரியாக 50 ஓவர்களில் 247 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்காத நிலையில் இந்த ஸ்கோர் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் பாகிஸ்தான் அணி முதல்முறையாக இந்திய மகளிர் அணியின் 10 விக்கெட்களையும் சாய்த்து வரலாறு படைத்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் இதுவரை 11 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. ஆனால், ஒரு போட்டியில் கூட பாகிஸ்தான் அணியால் இந்தியாவின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்த முடிந்ததில்லை. இந்திய அணியின் பேட்டிங் வரிசை எப்போதுமே பலமாகக் கருதப்படுவதால், இது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு முடியாத காரியமாகவே இருந்து வந்தது. அந்த சாதனையை தற்போது பாகிஸ்தான் மகளிர் அணி செய்துள்ளது.
இந்திய அணி நிர்ணயித்த 248 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி ஆசிய பாகிஸ்தான் அணி மிக மோசமாக ஆடி சொதப்பியது. அந்த அணியின் சிட்ரா அமின் 81 ரன்கள் எடுத்த போதும் மற்றவர்கள் சொற்ப ரன்களே எடுத்து நடையைக் கட்டினர். இதை அடுத்து பாகிஸ்தான் அணி 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்தது.
இந்திய மகளிர் அணி 12வது முறையாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதுவரை ஆடிய 12 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா மகளிர் அணியே வெற்றி பெற்றுள்ளது.