ஷபாலி 40 ரன்களும், ஸ்மிருதி 45 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். தம்புலா: 2024 மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முதல் முறையாக மகளிர் கிரிக்கெட்டுக்கான ஆசிய கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்று இருந்த இந்திய மகளிர் மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், அந்த முடிவு பாகிஸ்தான் அணிக்கு பாதகமாக மாறியது. இந்திய மகளிர் அணியின் பவுலர்கள் வரிசையாக விக்கெட் வேட்டையாடினர். பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அணியில் சிட்ரா அமீன் 35 பந்துகளில் 25 ரன்கள் எடுத்ததே ஒரு வீராங்கனை எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அடுத்து துபா ஹசன் 22 ரன்கள் எடுத்தார். எட்டாம் வரிசையில் இறங்கிய ஃபாத்திமா சனா 22 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணியின் தீப்தி சர்மா சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ரேணுகா சிங் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார். இவர் 13வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி, 61 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் அணியை 61 ரன்களுக்கு 6 விக்கெட்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்றார்.
பூஜா வஸ்திராகர் மற்றும் ஸ்ரேயங்கா பாட்டில் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அடுத்து இந்திய அணி சேஸிங்கில் பட்டையை கிளப்பியது. துவக்கம் அளித்த ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தனர். ஷபாலி 40 ரன்களும், ஸ்மிருதி 45 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். பின்னர் இந்திய அணி 3 விக்கெட் இழந்த நிலையில் 14.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்யும் என எதிர்பார்த்த நிலையில் மாறாக பேட்டிங்கை தேர்வு செய்ததே இந்த மோசமான நிலைக்கு காரணம் ஆகும். அந்த வகையில் டாஸ் முடிவை தவறாக எடுத்து தங்களுக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொண்டது பாகிஸ்தான் மகளிர் அணி.