கொல்கத்தா: இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகி இருப்பதால், 3வது ஸ்பின்னரை இந்திய பிளேயிங் லெவனில் சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகியுள்ளார். கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்துவீச்சாளரான பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பும்ரா, ஷமி மற்றும் சிராஜ் ஆகியோருக்கு பேக் அப் வீரராக பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஆனால் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதால், இந்திய அணிக்கு மறைமுகமாக மற்றொரு பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. இதனால் எஞ்சியுள்ள 2 லீக் போட்டிகள், அரையிறுதி போட்டிகள் ஆகியவற்றில் அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில், அகமதாபாத் மைதானத்தில் களமிறங்க வேண்டும்.
அகமதாபாத் மைதானத்தில் 3 ஸ்பின்னர்கள், 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் அணிக்கு கூடுதல் சாதகம் இருக்கும். ஆனால் ஹர்திக் பாண்டியா இல்லாததால், இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக அந்த இடத்தில் ஷர்துல் தாக்கூரை களமிறக்கவும் வாய்ப்பில்லை என்றே பார்க்கப்படுகிறது.
இதன் மூலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் இனி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைப்பது கடினமான ஒன்றாகவே உள்ளது. இதனால் இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள், ஒரு ஆல்ரவுண்டர் மற்றும் 4 முழுமையான பவுலர்கள் என்ற காம்பினேஷனில் இந்திய அணி களமிறங்கும்.

இதனால் 5 பவுலர்களில் ஒருவர் சொதப்பினால் கூட இந்திய அணியின் பவுலிங் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் எதிரணிகளுக்கு இந்திய அணியின் திட்டமும் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது. இதனை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா எப்படி சமாளிப்பார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.