ராஞ்சி: இந்தியா நிர்ணயித்த 350 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்க அணி சேஸிங்கில் 5 விக்கெட் இழந்து திணறியபோது, ஆல்-ரவுண்டர் மார்கோ ஜான்சன் எதிர்பாராத வகையில் அதிரடி ஆட்டம் ஆடி இந்திய பந்துவீச்சாளர்களைத் தெறிக்கவிட்டார். குறிப்பாக இரண்டு ஓவர்களில் அவர் அடித்த அடி, இந்திய அணி வீரர்களுக்கு சிறிது நேரம் "மரண பயத்தை" காட்டியது.
350 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா, டேவிட் பிரேவிஸ் (37) விக்கெட்டை இழந்தபோது 21.4 ஓவர்களில் 130 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. போட்டி இந்தியாவின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்தது. ஆனால், அதன் பிறகு களமிறங்கிய மார்கோ ஜான்சன் ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

நிதானமாகத் தொடங்கிய ஜான்சன், 25 மற்றும் 26-வது ஓவர்களில் தனது கியரை மாற்றினார். இந்திய பந்துவீச்சாளர்களைக் குறிவைத்து வெளுத்து வாங்கினார்.
குல்தீப் யாதவ் வீசிய 25-வது ஓவரில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அந்த ஓவரில் மட்டும் 15 ரன்களைக் குவித்தார். அடுத்து பிரசித் கிருஷ்ணா வீசிய 27-வது ஓவரில் மீண்டும் அதே வேகத்தைக் காட்டினார்.
அந்த ஓவரிலும் 15 ரன்கள் பறக்க, 2 ஓவர்களில் மட்டும் தென்னாப்பிரிக்காவுக்கு 30 ரன்கள் கிடைத்தது. இந்த அதிரடியால் தென்னாப்பிரிக்க அணியின் ரன் ரேட் மளமளவென உயர்ந்தது. இந்திய கேப்டன் கே.எல்.ராகுல் செய்வதறியாமல் திகைத்தார்.
தொடர்ந்து இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த ஜான்சன், வெறும் 26 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். மேத்யூ பிரீட்ஸ்கேவுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 69 பந்துகளில் 97 ரன்கள் கூட்டணி அமைத்தார்.
இறுதியில் 39 பந்துகளைச் சந்தித்த ஜான்சன், 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 70 ரன்கள் குவித்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜான்சன் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே, மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த மேத்யூ பிரீட்ஸ்கேவும் 80 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
குல்தீப் யாதவ் ஒரு ஓவரில் 15 ரன்களை விட்டுக் கொடுத்தாலும் பின்னர் ஆபத்தான இருவரின் விக்கெட்களை வீழ்த்தி திருப்பம் ஏற்படுத்தினார். பின்னர் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து வந்த பின்வரிசை வீரர்கள் ரன் சேர்க்க முயன்ற போதும் விக்கெட்களை இழந்தனர்.