கட்டாக்: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) ஒடிசாவின் கட்டாக் நகரில் உள்ள பாரபதி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தின் பிட்ச் எப்படி இருக்கும்? மழை வருமா? டாஸ் வென்றால் வெற்றி உறுதியா? என்பதற்கான விரிவான அறிக்கையை இங்கே காண்போம்.
இன்று கட்டாக்கில் மழை பெய்ய வாய்ப்பே இல்லை என்று வானிலை மையம் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. வானம் தெளிவாகக் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை: 27°C, குறைந்தபட்ச வெப்பநிலை: 14°C, இரவு நேரத்தில் குளிர் மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.
பாரபதி ஸ்டேடியம் மைதானம் பொதுவாக பேட்டிங்கிற்குச் சாதகமாக இருக்கும். பந்து பேட்டிற்கு நன்றாக வரும் என்பதால், ரசிகர்கள் இன்று ஒரு விறுவிறுப்பான அதிரடி டி20 ஆட்டத்தை எதிர்பார்க்கலாம். சிக்ஸர்கள் பறக்க அதிக வாய்ப்புள்ளது. ஆட்டத்தின் ஆரம்பத்தில், புதிய பந்து இருக்கும்போது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பிட்ச் சிறிதளவு கைகொடுக்கும். அந்த முதல் சில ஓவர்களை மட்டும் பேட்ஸ்மேன்கள் சமாளித்துவிட்டால், அதன் பிறகு ரன் வேட்டை நடத்தலாம்.

இந்தப் போட்டியில் 'பனிப்பொழிவு' முக்கிய வில்லனாக இருக்கும். இரவு நேரத்தில் பனி பெய்யும் என்பதால், இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவது பவுலர்களுக்குக் கடினமாக இருக்கும். பந்து வழுக்கும் என்பதால், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு ஷாட் அடிப்பது மிகவும் எளிதாகிவிடும்.
இந்தப் போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் தயங்காமல் பந்துவீச்சைத் தேர்வு செய்வதுதான் புத்திசாலித்தனம். ஆடுகளம் இரண்டாவது பாதியில் பேட்டிங்கிற்கு இன்னும் சாதகமாக மாறும். சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் இன்னிங்ஸில் பந்துவீசினால் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்த முடியும். குறிப்பாக பனிப் பொழிவு இரண்டாம் பாதியில் பந்துவீசுவதை கடினமானதாக மாற்றும்.
ஒருவேளை முதலில் பேட்டிங் செய்ய நேர்ந்தால், அந்த அணி குறைந்தது 210 முதல் 220 ரன்கள் குவித்தால் மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சாளர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்.
இந்த மைதானத்தில் இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடிய இரண்டு டி20 போட்டிகளிலுமே தோல்வியைத் தழுவியுள்ளது. ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்கவும், வெற்றியுடன் கணக்கைத் தொடங்கவும் சூர்யகுமார் யாதவ் படை இன்று வரிந்துகட்டிக் கொண்டு நிற்கிறது.