கட்டாக்: இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் தொடங்கியது. இதில் இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் மீண்டும் டாசை இழந்தார். டாசை பொறுத்தவரை இந்திய அணிக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டமே இல்லாமல் மாறிவிட்டது.
இந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்கரம், முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் நாங்கள் முதலில் பந்து வீச முடிவு எடுத்து இருக்கின்றோம்.

டி20 ,ஒருநாள், டெஸ்ட் என தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகின்றோம். இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. டி20 தொடரும் அதே மாதிரி தான் இருக்கும் என நினைக்கின்றேன். டி 20 உலக கோப்பை அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. அதற்கு இந்த தொடர் ஒரு நல்ல பயிற்சி களமாக இருக்கும்.
அதுவும் இந்தியாவுக்கு எதிராக நமது திறமையை பரிசோதிக்கும் போது அது உண்மையிலே நன்றாக இருக்கும். எங்களது அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் கேசவ் மகராஜ் இருக்கிறார்கள். நான் தேவைப்பட்டால் சுழற் பந்து வீசுவேன் என்று மார்க்கரம் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், டாஸை இழந்தது ஒரு விதத்தில் நல்லது தான்.
ஆடுகளம் குறித்து கொஞ்சம் எனக்கு குழப்பம் இருந்தது. நேற்று ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருந்தது. இன்று அப்படி இல்லை. எனவே முதலில் நாங்கள் பேட்டிங் செய்வதில் மகிழ்ச்சியே. பனிப்பொழிவு எப்போதுமே கடும் சவால்களை தரும். சவால்களை எதிர்கொள்வோம், தவிர அதைவிட்டு ஓடிவிட மாட்டோம்.
உலகக்கோப்பை தொடருக்கு நாங்கள் சிறப்பாக தயாராகி வருகிறோம். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து என 15 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் நல்லபடியாக முடிந்தது. தற்போது இந்த தொடரையும் எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி இருக்கின்றோம். எங்கள் அணியில் இன்று சஞ்சு சாம்சன், குல்தீப், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பெறவில்லை என்று சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார்.