கட்டாக்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்திய அணி தற்போது ஒடிசா மாநிலம் கட்டாக்கில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. முதல் டி20 போட்டி நாளை செவ்வாய்க்கிழமை கட்டாக்கில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்கள் இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். துணை கேப்டனாக கில் அணிக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

தொடக்க வீரராக அபிஷேக் ஷர்மாவுடன் கில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து கில் குணம் அடைந்து விட்டதால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. மூன்றாவது வீரராக கேப்டன் சூரியகுமார் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று நான்காவது வீரராக திலக் வர்மா களமிறங்கலாம்.
ஐந்தாவது வீரராக இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவார். ஆசிய கோப்பை தொடருக்கு பிறகு ஹர்திக் பாண்டியா தற்போது தான் இந்திய அணிக்கு திரும்பிருக்கிறார். இந்த தருணத்தில் ஆறாவது வீரராக சஞ்சு சாம்சன் அல்லது ஜித்தேஷ் சர்மா களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
கடைசியாக இந்திய டி20 போட்டியில் விளையாடிய போது ஜித்தேஷ் சர்மாவே ஆறாவது வீரராக விளையாடினார். ஏழாவது வீரராக ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் இடம்பெறக் கூடும். எட்டாவது வீரராக குல்தீப் யாதவும், ஒன்பதாவது வீரராக வருண் சக்கரவர்த்தியும் பத்தாவது வீரராக ஆர்ஸ்தீப் சிங்கும், 11 வது வீரராக பும்ராவும் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
இதில் ஒருவேளை இந்திய அணி பேட்டிங் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தால் குல்தீப் யாதவை நீக்கிவிட்டு அந்த இடத்தில் சிவம் துபேவை சேர்க்கலாம். இல்லையென்றால் இரண்டாவது வாய்ப்பாக வாஷிங்டன் சுந்தர் உள்ளார். இந்திய அணி பிளேயிங் XI: 1. சுப்மன் கில், 2. அபிஷேக் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. திலக் வர்மா, 5. ஹர்திக் பாண்டியா, 6. அக்சர் பட்டேல், 7. ஜித்தேஷ் சர்மா/சஞ்சு சாம்சன், 8. குல்தீப் யாதவ்/ வாசிங்டன் சுந்தர்/ சிவம் துபே, 9. வருண் சக்கரவர்த்தி, 10. பும்ரா, 11. ஆர்ஸ்தீப் சிங்/ ஹர்சித் ராணா