கொல்கத்தா: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், மைதானத்தின் ஆடுகளம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் அதிருப்தி தெரிவித்ததாக வெளியாகி உள்ள தகவல், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாயன்று, கேப்டன் சுப்மன் கில், பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷூ கோடக் மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோருடன் மைதானத்திற்கு வந்த தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஆடுகளத்தை நீண்ட நேரம் ஆய்வு செய்தார். ஆய்விற்குப் பிறகு, ஈடன் கார்டன் ஆடுகளப் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியுடன் கம்பீர் நீண்ட நேரம் உரையாடியுள்ளார்.

ஆடுகளத்தின் தன்மையைக் கண்டு இந்திய அணி நிர்வாகம் முழுமையான திருப்தி அடையவில்லை என்று தெரிகிறது. தற்போது ஆடுகளம் பழுப்பு நிறத்தில், லேசான புற்கள் படர்ந்து 'மந்தமான' தன்மையில் காணப்படுவதாகவும், போட்டி தொடங்குவதற்குள் இதில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இல்லாத இந்தத் தன்மையே அணி நிர்வாகத்தின் அதிருப்திக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி சொந்த மண்ணில் ஆடும் போட்டிகளில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயார் செய்து வருகிறது. அதற்கேற்ப அணியில் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிற வேகப் பந்துவீச்சாளர்களை தயார் செய்தும் வைத்துள்ளது. அணியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் இடம்பெறும் வகையில் வியூகம் அமைக்கப்படுகிறது. ஆனால், ஈடன் கார்டன் பிட்ச் அந்த திட்டத்துக்கு பாதகமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த சீசனில் ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டு ரஞ்சி கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. அந்தப் போட்டிகளில் ஆடுகளம் மந்தமாக இருந்ததாகவும், வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை எனவும் கூறப்படுவது, இந்திய அணி நிர்வாகத்தின் கவலையை உறுதிப்படுத்துகிறது.
ஆடுகள ஆய்விற்குப் பிறகு, கேப்டன் சுப்மன் கில் வலைப்பயிற்சியில் சுமார் ஒன்றரை மணி நேரம் தீவிரமாக ஈடுபட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சரியாகச் சோபிக்காத கில், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் தனது ஃபார்மை மீட்டெடுக்கும் முனைப்பில் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டார். வலைப்பயிற்சிக்கு முன்பு, பயிற்சியாளர் கௌதம் கம்பீர், கில்லிடம் நீண்ட நேரம் பேசி, அவரது பேட்டிங் அணுகுமுறை குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-1 எனச் சமன் செய்த தென்னாப்பிரிக்கா அணி, மிகுந்த நம்பிக்கையுடன் இந்தத் தொடரில் களமிறங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியின் இந்த ஆடுகளம் குறித்த அதிருப்தி பூதாகரமாக மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.