செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கர் இந்திய அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் 185 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற இருக்கும் டீன் எல்கர் இரட்டை சதம் அடிக்கவில்லை என்பது மட்டும் தான் அந்த அணிக்கு சிறிய ஏமாற்றமாக இருந்தது. மற்றபடி இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பே இல்லாதபடி தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸில் 163 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 245 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி தன் முதல் இன்னிங்க்ஸில் பெரிய அளவில் ரன் குவித்தது. அந்த அணியின் மூத்த வீரர் டீன் எல்கர் 185 ரன்கள் குவித்து அசத்தினார்.

36 வயதாகும் டீன் எல்கர் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில், தன் கடைசி டெஸ்ட் தொடரில் மறக்க முடியாத ஒரு பெரிய இன்னிங்க்ஸ் ஆடினார்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் 140 குவித்த டீன் எல்கர், மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கிய உடன் இந்திய அணியின் பந்துவீச்சில் மிக எளிதாக ரன் குவித்து 150 ரன்களை கடந்தார். இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் 185 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி அவரை வழியனுப்பி வைத்தனர். பல கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் சல்யூட் அடிப்பது போன்ற படத்தை போட்டு அவரது ஆட்டத்தை பாராட்டி வருகின்றனர்.
எல்கர் ஆட்டமிழந்த போது தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் எடுத்து இருந்தது. இந்திய அணியை விட 100 ரன்களுக்கும் மேல் முன்னிலை பெற்று இருந்தது தென்னாப்பிரிக்கா. அதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார் டீன் எல்கர். இந்திய வேகப் பந்துவீச்சாளர்களால் அவருக்கு எந்த வகையிலும் அழுத்தம் கொடுக்க முடியவில்லை.
அவர் ஆட்டமிழந்த பின் ஜான்சென் 84 ரன்கள் குவித்தார். 408 ரன்கள் குவித்த நிலையில் தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முதல் இன்னிங்க்ஸில் தென்னாப்பிரிக்கா 168 ரன்கள் முன்னிலை பெற்றது.