கொல்கத்தா: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் ஆமை வேகத்தில் ஆடி 20 ஓவர்களில் 37 ரன்கள் மட்டுமே எடுத்தது.
முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியில் துவக்க வீரர் ஐடன் மார்க்ரம் அதிகபட்சமாக 31 ரன்கள் சேர்த்தார். வியான் முல்டர் 24 ரன்களும், ரியான் ரிக்கெல்டன் 23 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால், தென்னாப்பிரிக்கா அணி 159 ரன்களுக்கு மட்டுமே ஆல் அவுட் ஆனது.

இந்த ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தி வந்ததை இந்தக் குறைவான ஸ்கோர் உணர்த்துகிறது. இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, பும்ராவுக்குச் சிறந்த ஒத்துழைப்பு அளித்தனர்.
தென்னாப்பிரிக்க அணியின் 159 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தைத் துவக்கியது. துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 பந்துகளைச் சந்தித்து 12 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன் பிறகு மூன்றாம் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். அவரும் கே.எல். ராகுலும் மிகவும் நிதானமாக ஆடினர். முதல் நாள் ஆட்டநேரம் முடிவு வரை விக்கெட் இழப்பின்றி ஆட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்கள் பல ஓவர்களை மேடன் ஓவர்களாகவே ஆடினார்கள்.
ஆட்டநேர முடிவில், கே.எல். ராகுல் 59 பந்துகளைச் சந்தித்து 13 ரன்கள் எடுத்திருந்தார். வாஷிங்டன் சுந்தர் 38 பந்துகளைச் சந்தித்து 6 ரன்கள் எடுத்து இருந்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 37 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழப்புடன் உள்ளது.
மூன்றாம் நாள் அன்று இந்தப் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக ஒத்துழைப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 300 ரன்களை எட்ட முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல். ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நிலைத்து நின்று ஆடினால், இந்தியா ஒரு பெரிய முன்னிலையைப் பெற வாய்ப்புள்ளது.