தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட்- இந்திய அணி அபாரம்- வெற்றி கிடைக்குமா?
சென்சூரியன்: இந்தியா,தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்சூரியனில் இன்று தொடங்கியது
மழை மேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் இருந்ததால் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது.
ஆனால், டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்யாமல் பேட்டிங்கை தேர்வு செய்தார். கோலி தவறான முடிவு எடுத்துவிட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர்

தவறவிட்ட வாய்ப்பு
தென்னாப்பிரிக்க வீரர்கள் ஆஃப் சைடுக்கு வெளியே வீசிய பந்தை இந்திய வீரர்கள் தொடாமல் நாங்கள் ராகுல் டிராவிட்டின் சிஸ்யங்கள் என நிரூபித்தனர். இருப்பினும் மாயங் அகர்வால் அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார். மாயங் அகர்வால் 36 ரன்கள் எடுக்கும் போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை குயின்டன் டி காக் தவறவிட்டார்.

அடுத்தடுத்து விக்கெட்
மாயங் அகர்வால் 60 ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாரா முதல் பந்திலேயே டக் அவுட்டனார். லுங்கி கிடி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் விராட் கோலி பொறுப்புடன் விளையாடி 35 ரன்கள் சேர்த்த போது தேவையில்லாத ஷாட் ஆடி அவுட்டானார்.

ராகுல் சதம்
இதனைத் தொடர்ந்த கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த ரஹானே, சற்று அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதனால் புது பந்தை தென்னாப்பிரிக்க அணி பயன்படுத்தியும் அது எந்த பயனும் அளிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய ராகுல் 7வது சதத்தை பூர்த்தி செய்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. ரஹானே 40 ரன்களுடனும், ராகுல் 122 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

நாளைய ஆட்டம்
தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி கிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாளைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் கடந்தால், இந்தியாவின் வெற்றி பிரகாசமாகிவிடும்.


Click it and Unblock the Notifications