செஞ்சுரியன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள், ராகுலுடன் சேர்ந்து சிறப்பாக ஆடினர்.
முக்கிய பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை எல்லாம் எளிதாக வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணிக்கு ராகுல், பின் வரிசை வீரர்களை வைத்துக் கொண்டு ஆடிய ஆட்டம் குடைச்சலை கொடுத்தது. அதிலும் ஷர்துல் தாக்குர் அதிரடியாக ரன் குவித்தது முதல் இன்னிங்க்ஸில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

செஞ்சுரியன் மைதானம் முதல் இரண்டு - மூன்று நாட்களுக்கு வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால் தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் முடிவுக்குள் இந்திய அணியை ஆல் - அவுட் செய்ய முயன்றது. 107 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த இந்திய அணி, ராகுல் 70 ரன்கள் குவித்ததால் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் என்ற நிலைக்கு சென்றது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்திய அணியின் எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வரிசை வீரர்களான ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது சிராஜ் ஆகியோரை வைத்துக் கொண்டு இந்திய அணி கூடுதலாக 87 ரன்கள் சேர்த்தது. இதில் ஷர்துல் தாக்குர் 24 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. பும்ரா 19 பந்துகளும், சிராஜ் 10 பந்துகளும் சந்தித்தனர்.
இந்திய பின்வரிசை வீரர்கள் குறைந்த பந்துகள் மட்டுமே தாக்குப் பிடித்து ஆடிய போதும் ராகுல் அதிரடியாக ரன் குவித்து ஸ்கோரை உயர்த்தினார். இந்தியா 200 ரன்களை தாண்டி உள்ள நிலையில், தென்னாப்பிரிக்க அணிக்கு இது பின்னடைவாக மாறவும் வாய்ப்பு உள்ளது. ஆடுகளம் தற்போது வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் நிலையில், தென்னாப்பிரிக்க அணியும், இந்திய வேகப் பந்துவீச்சாளர்களிடம் சிக்கும். அப்போது இந்திய பின்வரிசை வீரர்களை வைத்து கொண்டு ராகுல் ஆடிய ஆட்டம் போட்டியில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.