செஞ்சுரியன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள முதல் டெஸ்ட் போட்டி வரும் செவ்வாய்க்கிழமை அன்று துவங்க உள்ளது. ஆனால், முதல் நாள் அன்று ஒரு பந்து கூட வீச முடியாது என்பது தான் தற்போதைய நிலவரமாக உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் ஆடி முடித்துள்ளது. அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. 2023 உலகக்கோப்பை தொடருக்கு பின் ஓய்வில் இருந்த இந்திய அணியின் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பலரும் இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சுரியனில் நடைபெற உள்ளது. அங்கு பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில், மேலும் ஒரு சிக்கலும் இந்திய அணிக்கு வந்துள்ளது. அது மழை. ஆம், அங்கு போட்டியின் முதல் நாள் முழுவதும் கடுமையான மழை இருக்கும் என வானிலை அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.
அதே போல போட்டியின் இரண்டாம் நாளின் போதும் சில மணி நேரம் மழை இருக்கும் என வானிலை ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. அதனால், போட்டி மூன்றாம் நாள் அன்று தொடங்கவே வாய்ப்பு அதிகம். மூன்று நாள் மட்டுமே போட்டி நடந்தாலும் போட்டி முழுமையாக நடக்கும் என பிட்ச்சை தயார் செய்யும் அதிகாரி கூறி இருக்கிறார்.
அதற்கு காரணம், மழை பொழிவின் காரணமாக பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும். எனவே, மூன்றாவது நாள் வேகப் பந்துவீச்சுக்கு பிட்ச் ஒத்துழைக்கும். அப்போது விக்கெட்கள் விரைவாக விழும் என அவர் கணித்து இருக்கிறார். அந்த வகையில் மூன்றே நாட்களில் இரண்டு அணிகளும், தங்களின் இரண்டு இன்னிங்க்ஸ்களை ஆடி முடிக்க வாய்ப்பு உள்ளது.