கொல்கத்தா: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருக்கிறது. கடைசி இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த 124 ரன்கள் என்ற இலக்கை கூட எட்ட முடியாமல் இந்திய அணி 93 ரன்களில் சுருண்டது.
இதன் மூலம் 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. தோல்விக்கு என்ன காரணம் என்பதை தற்போது பார்க்கலாம். முதலில் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாகவே தயாரிக்கப்படவில்லை.

ஆனால் கம்பீரும், கேப்டன் கில்லும் ஆடுகளத்தை சோதனை செய்துவிட்டு பிசிசிஐயிடம் புகார் அளித்தனர். பிசிசிஐ இந்த விவகாரத்தில் உள்ளே வர ஆடுகளத்தின் தன்மையை கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. இதன் மூலம் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது.
சுழற் பந்து வீச்சை இந்திய அணி அபாரமாக எதிர்கொள்ளும் என்ற காலம் எல்லாம் மலையேறி போய்விட்டது. தற்போது உள்ள டி20 வீரர்கள் யாருக்கும் சுழற் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொள்ள திறமை கிடையாது. இந்த நிலையில் ஆடுகளத்தில் போட்ட திட்டம் இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.
அது மட்டுமல்லாமல் பிளேயிங் லெவனில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்ததும் மிகப்பெரிய தவறாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்த டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படவில்லை. இதனால் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் விளையாடினார்.
இது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நம்பர் மூன்றாவது இடத்தில் விளையாடும் ஒரு பேட்ஸ்மேன் தூக்கிவிட்டு ஆல்ரவுண்டரை சேர்ப்பதெல்லாம் முட்டாள்தனத்தில் உச்சகட்டம். இது தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக மாறிவிட்டது. அது மட்டுமில்லாமல் இந்திய அணியின் கேப்டன் கில் கழுத்து வலி காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
இதனால் இந்திய அணி வெறும் ஒன்பது பேட்ஸ்மேன்களை வைத்து இரண்டு இன்னிங்ஸிலும் விளையாடியது. இது போன்று ஆடுகளத்தில் இந்தியா ஏற்கனவே குறைவான பேட்டர்களை வைத்து விளையாடும் நிலையில், கில் போன்ற திறமை வாய்ந்த பேட்ஸ்மேன் இல்லாதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. தொடர்ந்து கம்பீர் தலைமையில், இந்திய டெஸ்ட் அணி தோல்விகளை தழுவி வருவதால் அவரை பயிற்சியாளர் பதவியில் இருந்து டெஸ்ட் போட்டிக்கு நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.