கொல்கத்தா தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்களை விரக்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும். இந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் எய்டன் மார்க்கரம் 31 ரன்களும், வியான் முல்டர் மற்றும் டோனி டிசோர்ஸி தலா 24 ரன்களும் எடுக்க அந்த அணி 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி பந்துவீச்சில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இரண்டாவது நாள் ஆட்டநேர தொடக்கத்தில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் என்ற ஸ்கோர் உடன் இந்தியா விளையாடியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராகுல் நான்கு பவுண்டரி, ஒரு சிக்சர் என 119 பந்துகளை எதிர் கொண்டு 39 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
மூன்றாவது வீரராக விளையாடிய வாஷிங்டன் சுந்தரும் பெரிய அளவு சோபிக்கவில்லை. 82 பந்துகளை எதிர்கொண்ட அவர் 29 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இந்த தருணத்தில் நான்கு ரன்களில் காயம் காரணமாக வெளியேறிய ரிஷப் பன்ட் இரண்டு பவுண்டரி, 2 சிக்சர் என 24 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ஜடேஜா 11 ரன்கள் உடனும், துருவ் ஜூரல் 5 ரன்கள் உடனும் களத்தில் உள்ளனர். இரண்டாவது நாள் மதியநேர உணவு இடைவெளியின்போது, இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்திருக்கிறது. இது தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை விட 21 ரன்கள் குறைவாகும். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோர் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து கொஞ்சம் சரிவை தந்திருக்கிறது. ஜடேஜா, துருவ் ஜூரல், அக்சர் பட்டேல் ஆகியோர் பெரிய இன்னிங்ஸ் அடித்தால் மட்டுமே இந்தியா முதல் இன்னிங்ஸில் 300 ரன்களை தாண்ட முடியும்.