IND vs SA : ரோஹித் சர்மாவின் வரலாற்று சாதனைக்கு முடிவு கட்டிய தென்னாப்பிரிக்கா.. 2 ஆண்டு ரெக்கார்டு
செஞ்சுரியன் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிக இன்னிங்க்ஸ்களில் தொடர்ந்து இரட்டை இலக்க ரன்கள் குவித்து சாதனை படைத்து இருந்தார் ரோஹித் சர்மா.
கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கி, 2023 ஜூலை வரை 30 டெஸ்ட் இன்னிங்க்ஸ்கள் ஆடி அதில் இரட்டை இலக்க ரன்களை எடுத்து இருந்தார் ரோஹித் சர்மா.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து இரட்டை இலக்க ரன்கள் சேர்ப்பதில் ரோஹித் சர்மா முதல் இடத்தை பிடித்து இருந்தார். அதாவது தொடர்ந்து 30 இன்னிங்க்ஸ்களில் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து இருந்தார்.

அந்த இன்னிங்க்ஸ் எண்ணிக்கை தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் தொடரும் என எதிர்பார்த்த நிலையில், ஒற்றை இலக்கத்தில், அதாவது 5 ரன்னில் ஆட்டமிழந்து அந்த சாதனையை தொடரும் வாய்ப்பை இழந்தார் ரோஹித் சர்மா.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரோஹித் சர்மாவுக்கு முன் மகிளா ஜெயவர்தனே 29 இன்னிங்க்ஸ்கள் வரை தொடர்ந்து இரண்டு இலக்கத்தில் ரன் சேர்த்து இருந்தார். அந்த சாதனையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முறியடித்தார் ரோஹித் சர்மா.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா சரியாக ஆடவில்லை என்ற விமர்சனம் இருக்கும் நிலையில், இந்த அரிய டெஸ்ட் வரலாற்று சாதனையை தனதாக்கி இருக்கிறார் ரோஹித் சர்மா. அதே சமயம், தென்னாப்பிரிக்க மண்ணில் அவரது மோசமான பேட்டிங் தொடர்கதையாக மாறி உள்ளது.
செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றம் அளித்தார். ராகுல், கோலி, ஸ்ரேயாஸ் தவிர மற்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் 20 ரன்களை தாண்டவில்லை. ராகுல் அரைசதம் அடித்தார். தென்னாப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா 5 விக்கெட் வீழ்த்தி இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து இருந்தது. கே எல் ராகுல் 70 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications