செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா படுமோசமாக தோற்றது. இந்த நிலையில், பிரசித் கிருஷ்ணா செயலால் கேப்டன் ரோஹித் சர்மா வேதனையில் இருப்பதாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஷான் பொல்லாக் கூறி இருக்கிறார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. அடுத்து தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்த போது இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்குர் படுமோசமாக வீசினர்.

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ஆஃப் சைடு பந்து வீசாமல், லெக் திசையில் பந்து வீசினர். அதனால், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் குவித்தனர். இதை அடுத்து மூன்றாம் நாள் ஆட்டத்தின் போதும் பிரசித் கிருஷ்ணா லெக் திசையிலேயே பல பந்துகளை வீசி ரன்களை வாரி இறைத்துக் கொண்டு இருந்தார்.
ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்களை இழந்த நிலையில் பிரசித் கிருஷ்ணா ஒரே ஓவரில் மூன்று பந்துகளை லெக் திசையில் வீசினார். அதைப் பார்த்த ரோஹித் சர்மா, இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்று இருந்தார். அந்த காட்சி ரசிர்களுக்கு புரியவில்லை. ஆனால், அனுபவ வேகப் பந்துவீச்சாளரான ஷான் பொல்லாக் அதைப் பற்றி விவரித்து, இந்திய அணியில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்ற உண்மையை வெளிப்படுத்தினார்.
பொல்லாக் கூறுகையில், இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்த பின்னர் இந்திய அணி பந்துவீச்சாளர்களிடம் லெக் திசையில் பந்து வீசக் கூடாது என கூறப்பட்டு இருக்கும். ஆனால், அதை பிரசித் கிருஷ்ணா கேட்டு செயல்படவில்லை. மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை விரைவாக ஆல் - அவுட் செய்தால் இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், அதை பிரசித் செய்யவில்லையே என ரோஹித் சர்மா நினைத்து இப்படி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு நிற்கிறார் என்றார்.
இந்தப் போட்டியில் பிரசித் கிருஷ்ணா முதல் இன்னிங்க்ஸில் 20 ஓவர்களில் 93 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ஷர்துல் தாக்குர் 19 ஓவர்களில் 101 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்க்ஸில் 408 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடிய இந்திய அணி 131 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. தென்னாப்பிரிக்கா ஒரு இன்னிங்க்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
பிரசித் கிருஷ்ணாவுக்கு இதுவே அறிமுக டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 6 அடி 5 அங்குலம் உயரம் இருப்பதால் அவர் தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் சிறப்பாக பவுன்ஸ் பந்துகளை வீசுவார் எனக் கருதியே கேப்டன் ரோஹித் சர்மா அவரை முதல் டெஸ்ட் போட்டியில் தேர்வு செய்தார். ஆனால், அவர் முடிவு தவறாக மாறியது.