கொல்கத்தா: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் பிடிக்க முடியும்.
அதே போன்று தென்னாப்பிரிக்க அணி கடைசியாக இந்திய மண்ணில் 2010 ஆம் ஆண்டு தான் நாக்பூரில் டெஸ்ட் போட்டியில் வென்றது. அதன் பிறகு விளையாடிய 8 போட்டிகளில் 7 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவி இருக்கிறது.

இதனால் வரலாற்றை மாற்ற வேண்டிய உத்வேகத்துடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியுள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா, தென்னாப்பிரிக்கா ஏ அணியில் நாங்கள் இருந்தோம்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று,அதே உத்வேகத்துடன் இந்த டெஸ்டிலும் களமிறங்குகிறோம். தற்போது சவால்களை சந்தித்து வெற்றி பெற வேண்டும். ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருக்கின்றது. முதலில் பேட்டிங் செய்து ரன் குவிக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
எங்கள் அணியில் இன்று ரபாடா இல்லை. அதற்கு பதில் கார்பின் போஸ் இடம் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் கில், நான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தான் டாசை வெல்வேன் என்று நினைக்கின்றேன். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
எங்கள் ட்ரெஸ்ஸிங்கும் நன்றாக தான் இருக்கின்றது எங்கள் வீரர்கள் அனைவரும் வெற்றிப் பசியுடன் இருக்கின்றார்கள். ஆடுகளம் முதல் சில நாட்கள் பேட்டிங்கிற்கும், சாதகமாகவும் பின்னர் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் என்று நினைக்கின்றேன். எங்களது அணியில் ரிஷப் பன்ட் அக்சர் பட்டேல் ஆகியோர் திரும்பி இருக்கிறார்கள் என்று கில் கூறினார். இந்திய அணியில் சாய் சுதர்சன் இடம்பெறவில்லை.அதற்கு பதில் ஜடேஜா அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் என நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய அணி களமிறங்கியுள்ளது.