
327 ரன்களுக்கு ஆல் அவுட்
2வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீச இந்திய அணி மேலும் 55 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஷமி அபாரம்
தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி கிடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கினர். கேப்டன் எல்கார் 1 ரன்னில் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து முகமது ஷமி, அனல் பறக்க பந்துவீசி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பெவுமா அரைசதம்
டுசனை 3 ரன்களில் சிராஜ் ஆட்டமிழக்க வைத்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 32 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த டெம்பா பெவுமா, குயின்டன் டி காக் பொறுமையாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர். டி காக் 34 ரன்களில் ஆட்டமிழக்க, பொறுப்பாக விளையாடிய பெவுமா 52 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

197 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இதனையடுத்து தென்னாப்பிரிக்காவின் பின்வரிசை வீரர்கள் சற்று அதிரடியாக விளையாடி ரன் குவிக்க முயன்றனர். ரபாடா அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 197 ரன்களுக்கு சுருண்டது. 130 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரர் மாயங் அகர்வால் 4 ரன்களில் வெளியேற, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 16 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோருடன் இருந்தது. களத்தில் நைட் வாட்ச்மேனாக ஷர்துல் தாக்கூர், கே.எல்.ராகுலுக்கு துணையாக நின்றார்.

வெற்றிக்கு வழி
தற்போது இந்திய அணி வெற்றிக்கு அருகில் இருந்தாலும், இரண்டாவது இன்னிங்சில் குறைந்தது 200 ரன்களுக்கு மேலாவது அடித்து தென்னாப்பிரிக்காவுக்கு பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். இல்லையேனில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் சொதப்பினால், ஆட்டம் தென்னாப்பிரிக்கா பக்கம் திரும்பிவிடும்.


Click it and Unblock the Notifications











