செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா போட்டி துவங்கி 19 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் எல்லாம் காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார். கேப்டன் இல்லாத நிலையில் தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்று இருந்த மூத்த வீரர் டீன் எல்கர் தற்காலிகமாக கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
அவர் தான் தற்போதைய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் வயதான வீரர். மேலும், அவர் இந்தியாவுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிந்த உடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்து இருக்கிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அணியை வழிநடத்தும் பொறுப்பு அவரிடம் வந்தது. அவரும் அதை சிறப்பாக செய்து இந்திய அணிக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தார்.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறி விக்கெட்களை இழந்தது. 20வது ஓவர் முதல் கேப்டன் பொறுப்பை ஏற்ற எல்கர், வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தினார். பகுதி நேர சுழற் பந்துவீச்சாளர்கள் மட்டுமே அணியில் இருந்த நிலையில் அவர்களை பயன்படுத்தவே இல்லை.
இந்திய அணி பேட்ஸ்மேன்களால் வேகப் பந்துவீச்சை சமாளித்து ஆட முடியவில்லை என்ற சூழ்நிலையில் தொடர்ந்து வேகப் பந்துவீச்சாளர்கள் ரபாடா, பார்கர், ஜான்சென் மற்றும் கோட்ஸியை பயன்படுத்தினார். ரபாடா அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்கள் வீழ்த்தினார். பர்கர் 2 விக்கெட், ஜான்சென் 1 விக்கெட் வீழ்த்தினர்.
தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை சமாளித்து ஆடிய கே எல் ராகுல் 70 ரன்கள் குவித்ததால் டீன் எல்கரின் திட்டப்படி இந்திய அணியை எளிதாக முதல் இன்னிங்க்ஸில் ஆல் - அவுட் செய்ய முடியவில்லை. ஆனாலும், ராகுலுக்கு யாரும் கூட்டணி அளித்து ஆட முடியாதபடி பின் வரிசை வீரர்களையும் அச்சுறுத்தும் வகையில் பந்து வீசச் செய்தார் எல்கர்.
ஷர்துல் தாக்குர் தலையில் பவுன்சர் தாக்கியது. அதே போல, பும்ரா கைகளில் ஒரு பவுன்சர் பந்து கடுமையாக தாக்கியது. என்னதான் தென்னாப்பிரிக்கா அச்சுறுத்தும் வகையில் பந்து வீசினாலும் ராகுல் 70 ரன்கள் குவித்ததை அடுத்து இந்திய அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது.