செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தந்த தவறான யோசனையை கேட்டு கேப்டன் ரோஹித் சர்மா ரிவ்யூ கேட்டார். ஆனால், இந்திய அணிக்கு ஒரு ரிவ்யூ பறிபோனது தான் மிச்சம்.
விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் சேர்ந்து தான் இந்த தவறான யோசனையை ரோஹித் சர்மாவுக்கு அளித்து இருந்தனர்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 245 ரன்கள் சேர்த்தது. கே எல் ராகுல் 101 ரன்கள் அடித்து இருந்தார். அடுத்து தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது. துவக்க வீரர் மார்கிரம் 5 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மற்றொரு துவக்க வீரர் டீன் எல்கர், டோனி டி ஜோர்சி உடன் இணைந்து ரன் சேர்ப்பில் ஈடுபட்டார். இந்த கூட்டணியை பிரிக்க இந்தியா போராடியது. 13வது ஓவரின் போது பிரசித் கிருஷ்ணா வீசிய பந்தை அடிக்க முயன்றார் எல்கர். ஆனால், பந்து ஏதோ ஒன்றை உரசிக் கொண்டு சென்று கே எல் ராகுல் வசம் கேட்ச் ஆனது.
பந்து எல்கரை தாண்டும் போது சத்தம் கேட்டதால் ராகுல் ஆது அவுட் என அம்பயரிடம் முறையிட்டார். ஆனால், அம்பயர் அவுட் தரவில்லை. இதை அடுத்து ரிவ்யூ கேட்கலாமா? என கேப்டன் ரோஹித் சர்மா கேட்ட போது, ராகுல் அவுட் தான் என்றார். அப்போது விராட் கோலி சத்தம் நன்றாக கேட்டது, அவுட் தான் எனக் கூறினார்.
கோலி அவுட் தான் என மிக உறுதியாக கூறியதால் ரோஹித் சர்மா ரிவ்யூ கேட்டார். ஆனால், ரீப்ளேவில் பந்து எல்கரின் காலை உரசிச் சென்றது தெரிய வந்தது. இந்திய அணி ஒரு ரிவ்யூவை இழந்தது. இதை அடுத்து கேப்டன் ரோஹித் சர்மா ஏமாற்றம் அடைந்தார். டெஸ்ட் போட்டிகளில் ரிவ்யூ பெரிய அளவில் உதவி செய்யும். இந்த நிலையில், இந்திய அணி ஒரு ரிவ்யூவை வீணாக்கியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 245 ரன்கள் எடுத்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து உள்ளது. இந்திய அணியை விட 11 ரன்கள் அதிகம் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா கூடுதல் ரன்கள் சேர்க்கும் என்பதால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.