செஞ்சுரியன் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை விராட் கோலி காப்பாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தேவையில்லாத ஷாட் ஆட முயன்று அவுட் ஆனார்.
மற்ற இந்திய வீரர்களை எல்லாம் எளிதாக வீழ்த்திய தென்னாப்பிரிக்க அணி, கோலி அவுட் ஆனதும் கொண்டாடித் தீர்த்தனர். முதல் டெஸ்டில் இந்த நிகழ்வு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்க அணி டாஸில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்வது கடினம் என கூறப்பட்டது.
அதே போல, இந்திய அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ரோஹித் சர்மா 5 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 17 ரன்களிலும், சுப்மன் கில் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட்கள் வீழ்ந்தாலும் விராட் கோலி சிறப்பாக ஆடினார்.
அவருக்கு முதலில் ஒத்துழைப்பு அளித்து ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து விராட் கோலி 38 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா வீசிய பந்தை தேவையே இல்லாமல் அடித்து ஆட முயன்று ஆட்டமிழந்தார்.
31வது ஓவரை ரபாடா வீசிய நிலையில், அப்போது பந்து அவுட்சைடு ஆஃப் திசையில் சென்றது. அந்த பந்தை அடிக்காமல் விட்டு இருக்கலாம். ஆனால், கோலி அடிக்க முயன்றார். அப்போது பந்து அவுட்சைடு எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்தார். மற்ற வீரர்கள் கைவிட்ட நிலையில், விராட் கோலி வழக்கம் போல அணியை தனி ஆளாக காப்பற்றுவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
தென்னாப்பிரிக்க வீரர்கள் பெரிய விக்கெட் ஆன விராட் கோலி தானாக வந்து சிக்கியதை அடுத்து கொண்டாடி தீர்த்தனர். கோலி ஆட்டமிழந்த போது 31 ஓவர் 5 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது இந்திய அணி.