நான்காம் வரிசை குழப்பம்
இந்திய அணியில் நீண்ட காலமாக நான்காம் வரிசையில் யாரை பேட்டிங் செய்ய வைப்பது என்ற குழப்பம் நீடித்து வருகிறது. யுவராஜ் சிங் அணியை விட்டு சென்ற பின், எந்த வீரரும் அந்த இடத்தில் பொருந்தவில்லை.
நிரூபித்த ஸ்ரேயாஸ் ஐயர்
உலகக்கோப்பை தொடர் வரை நீடித்த அந்த குழப்பத்துக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முற்றுப் புள்ளி வைத்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இரண்டு ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு அரைசதங்கள் அடித்து தன்னை நிரூபித்தார்.
குழப்பம்
அவர் தான் இனி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் என நினைத்த போது, குழப்பம் துவங்கியது. இந்தியாவில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார்.
ரிஷப் பண்ட் பார்ம் அவுட்
ஏற்கனவே, பார்ம் அவுட்டில் இருக்கும் ரிஷப் பண்ட்டுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்க முடிவு செய்து அவரை தென்னாப்பிரிக்கா தொடரில் நான்காம் வரிசை பேட்ஸ்மேன் ஆக களமிறக்கினார் கேப்டன் கோலி.
விமர்சகர்கள் கருத்து
ஆனால், அந்த இடமும் அவருக்கு சரியாக பொருந்தவில்லை. இரண்டாவது டி20யில் வெறும் 4 ரன்கள் எடுத்து மோசமான முறையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் பண்ட். அவரை ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வைப்பது தான் சரி என விமர்சகர்கள் கருத்து கூறி இருந்தனர்.
அந்த சம்பவம்
இந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டியில் நான்காம் வரிசையில் யாரை கோலி இறக்குவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ரோஹித்தை அடுத்து தவான் ஆட்டமிழந்தார். இரண்டு விக்கெட்களை இழந்தது இந்தியா. அடுத்து நான்காம் வரிசை பேட்ஸ்மேன் வர வேண்டும்.
இருவரும் வந்தனர்
அப்போது ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் காலில் பேட் கட்டிக் கொண்டு, கிரிக்கெட் பேட்டை தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினர். பின்னர், இருவரும் யார் பேட்டிங் செய்ய செல்வது என குழப்பத்தில் நின்றனர்.
இருவரும் சொதப்பல்
கடைசியில், ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால், போட்டியில் இருவருமே பெரிய அளவில் சரியாக ரன் குவிக்கவில்லை. சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதுவும் மூன்று பந்துகள் இடைவெளியில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி இந்தப் போட்டியில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.
உலகக்கோப்பை அரையிறுதி
இந்த சம்பவம் உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை குழப்பத்தை நினைவு கூருவதாக இருந்தது. அந்தப் போட்டியில் தோனி ஏழாம் இடத்தில் பேட்டிங் செய்ய வந்ததும் சர்ச்சை ஆனது. யார் அந்த முடிவை எடுத்தார் என்பதும் இன்று வரை தெரியவில்லை.
கேலிக்கூத்து ஆகும் இந்திய அணி?
இந்திய அணி உலகக்கோப்பைக்கு பின் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்கள், அணியில் நடக்கும் இது போன்ற கேலிக்கூத்துகளை கண்டு மனம் வெறுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.