கேபெர்ஹா : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள இரண்டாவது ஒருநாள் போட்டி பிட்ச் குறித்து இந்திய அணிக்கு சாதகமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இரண்டாவது போட்டி கேபெர்ஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த மைதானத்தில் தென்னாப்பிரிக்க அணி அதிக வெற்றிகளை பெற்று இருந்தாலும் அதெல்லாம் பழைய கதையாகவே உள்ளது. சமீப காலமாக அந்த பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்சாக உள்ளது. அங்கு பவுன்ஸ் இருக்காது என்பதால் வேகப் பந்துவீச்சாளர்களை மட்டுமே நம்ப முடியாது.
இதற்கு முன் இதே மைதானத்தில் தென்னாப்பிரிக்கா ஆடிய கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளில் இரண்டில் அந்த அணி தோல்வி அடைந்துள்ளது. அந்த தோல்விகள் இரண்டுமே ஆசிய அணிகளுக்கு எதிராக கிடைத்தவை. சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமலே அப்போது தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்து இருந்தது.
இந்த சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் தென்னாப்பிரிக்க அணிக்கு எந்த வகையில் பாதகமான விஷயம் என்றால், தற்போதைய தென்னாப்பிரிக்க அணியில் இடம் பெற்று இருக்கும் பல இளம் வீரர்களுக்கு சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ளும் அனுபவம் குறைவாக உள்ளது. அதனால், 50 ஓவர்கள் தாக்குப் பிடித்து ஆடுவது தென்னாப்பிரிக்க அணிக்கு கடினமான ஒன்றாக இருக்கும்.
சமீபத்தில் இதே மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆடிய டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 15 ஓவர்களில் 154 ரன்களை சேஸிங் செய்து இருந்ததே என சிலர் கேட்கலாம். ஆனால், அந்தப் போட்டி மழைக்கு நடுவே நிறுத்தப்பட்டு நடைபெற்றதால் பந்து ஈரமாக மாறியதே இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போக காரணமாக இருந்தது. ஆனால், 50 ஓவர்கள் போட்டி எனும் போது, ஈரப்பதம் குறைவாக இருக்கும் பட்சத்தில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஜோடி சுழற் பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது மழை வர வாய்ப்பில்லை என்றே வானிலை அறிக்கை கூறி உள்ளது. மேலும், இந்த மைதானத்தில் 300 ரன்கள் அடிப்பது என்பது அரிதான விஷயமே. எனவே, முதலில் பேட்டிங் செய்யும் அணி 260 - 280 ரன்கள் அடித்தாலே வெற்றிக்கு போதுமான ஸ்கோராக இருக்கும்.