ராய்ப்பூர்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் ஆரம்பமே அமர்க்களமாகச் சொதப்பி, இந்திய அணிக்கு ரன்களை வாரி வழங்கியுள்ளனர். குறிப்பாக முதல் இரண்டு ஓவர்களிலேயே 10 எக்ஸ்ட்ரா (உதிரி) ரன்களைக் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
ராய்ப்பூரில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று, முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஆனால், அவர்களின் பந்துவீச்சில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.

முதல் ஓவரை வீசிய நாண்ட்ரே பர்கர், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு எதிராகத் திணறினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரி சென்றது. அதன்பிறகு பர்கர் திசைமாறி வீசினார். முதலில் ஒரு வைடு சென்றது. அதைத் தொடர்ந்து கீப்பரால் கூட பிடிக்க முடியாத அளவுக்கு வீசப்பட்ட மற்றொரு வைடு பந்து பவுண்டரிக்குச் சென்றது. அதனால் இந்தியாவுக்கு 5 ரன்கள் கிடைத்தன. முதல் ஓவரிலேயே இந்தியாவுக்கு மொத்தமாக 14 ரன்கள் கிடைத்தது.
சரி, இரண்டாவது ஓவரிலாவது கட்டுக்கோப்பாக வீசுவார்கள் என்று பார்த்தால், லுங்கி இங்கிடி அதைவிட மோசமாகச் செயல்பட்டார். ஸ்ட்ரைக்கில் இருந்த ரோஹித் சர்மாவுக்கு எதிராக, அவர் தொடர்ந்து 3 வைடுகளை வீசினார். அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 4 வைடுகள் வீசப்பட்டன. 6 பந்துகள் வீச வேண்டிய ஒரு ஓவருக்கு, இங்கிடி 10 பந்துகளை வீசித் திணறினார்.
முதல் இரண்டு ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்தது. இதில் பேட்ஸ்மேன்கள் அடித்தது 12 ரன்கள் என்றால், மீதமுள்ள 10 ரன்களும் எக்ஸ்ட்ரா வகையில் தென்னாப்பிரிக்காவே இலவசமாக வழங்கியதுதான்.
ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா கொடுத்த எக்ஸ்ட்ரா 23 ரன்கள். இந்தியா கொடுத்த எக்ஸ்ட்ரா 6 ரன்கள். இதன் வித்தியாசம் 17 ரன்கள். சரியாக வெற்றி வித்தியாசமும் 17 ரன்கள்தான்.
முதல் போட்டியில் செய்த அதே தவறை, இரண்டாவது போட்டியின் ஆரம்பத்திலே தென்னாப்பிரிக்கா செய்துள்ளது.
ரோஹித் சர்மா 8 ப பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஜெய்ஸ்வால் 38 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.