சண்டிகர்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்த பிறகு, டிரெஸ்ஸிங் ரூமில் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும், நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவும் காரசாரமாக விவாதித்துக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூ சண்டிகரில் நடந்த இந்தப் போட்டியில் 215 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்தியா, 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியால் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையை அடைந்துள்ளது. இந்தப் போட்டியின் தோல்விக்கு பாண்டியா தான் காரணம் என கம்பீர் அவரிடம் கோபம் கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போட்டி முடிந்த பிறகு எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், கவுதம் கம்பீர் மிகவும் ஆவேசமாக ஹர்திக் பாண்டியாவிடம் பேசுவது பதிவாகியுள்ளது. பாண்டியா தனது தரப்பு விளக்கத்தை அளிப்பது போலவும், கம்பீர் அதை ஏற்காமல் கேள்விகளை அடுக்குவது போலவும் காட்சிகள் உள்ளன. ஆடியோ இல்லை என்றாலும், அவர்களின் உடல் மொழியை வைத்தே அங்கு நிலைமை சரியில்லை என்பதை ரசிகர்கள் கணித்துள்ளனர்.
இந்த மோதலுக்கு ஹர்திக் பாண்டியாவின் மந்தமான ஆட்டம் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க டி20 தொடரின் முதல் போட்டியில் 28 பந்துகளில் 59 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டார் பாண்டியா. ஆனால், இரண்டாவது போட்டியில் 215 ரன்களை சேஸ் செய்ய வேண்டிய இக்கட்டான சூழலில், அவர் 23 பந்துகளைச் சந்தித்து வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதிரடியாக ஆட வேண்டிய நேரத்தில், அவர் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடியது அணியின் ரன் ரேட்டைப் பாதித்தது. "ஏன் வேகத்தை அதிகரிக்கவில்லை?" என்று கம்பீர் கேள்வி எழுப்பியிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த தோல்விக்கு வெறும் ஹர்திக் பாண்டியாவை மட்டும் குறை சொல்ல முடியாது. கம்பீரின் சில முடிவுகளும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன.
டி20 ஃபார்மில் இல்லாத சுப்மன் கில்லை ஏன் தொடர்ந்து ஆதரிக்கிறீர்கள்? முக்கியமான 3-வது இடத்தில் அக்சர் படேலை ஏன் களமிறக்க வேண்டும்? என முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உலகக்கோப்பை நெருங்கும் வேளையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் தடுமாறுவதும், இதுபோன்ற டிரெஸ்ஸிங் ரூம் சலசலப்புகளும் ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளன. அடுத்த போட்டி தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. அங்கு இந்திய அணி தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டு வருமா?