கேபெர்ஹா : இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணித் தேர்வில் செய்த தவறால் இந்திய அணி பெரும் தடுமாற்றத்தை சந்தித்து தோல்வி அடைந்ததாக ரசிகர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
துவக்க வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் என இருவரும் டக் அவுட் ஆனதால் இந்திய அணி தடுமாற்றத்தை சந்தித்தது. சிறப்பாக ஆடி வந்த துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை அணியில் சேர்க்காமல் போனதே இந்த நிலைக்கு காரணம் என பலரும் சமூக ஊடகங்களில் கூறி வருகின்றனர்.

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு உடல்நிலை சரியில்லை என கேப்டன் சூர்யகுமார் யாதவ் டாஸ் நிகழ்வின் போது அறிவித்து இருந்தாலும், பல ரசிகர்கள் அதை நம்ப மறுத்து விமர்சனம் செய்தனர். சுப்மன் கில்லை அணியில் சேர்க்க வேண்டி ருதுராஜ் கெய்க்வாட் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக கொந்தளித்து வருகின்றனர்.
இதற்கு முன் நடந்த ஆஸ்திரேலிய டி20 தொடரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி சிறப்பாகவே ஆடி இருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் அந்த தொடரில் அதிக ரன் குவித்து தன் ஃபார்மை நிரூபித்தார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கு ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால் ஆகியோருடன் சுப்மன் கில்லும் உத்தேச அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். இவர்கள் மூவருமே துவக்க வீரர்கள் என்பதால் எந்த மூன்று வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சுப்மன் கில்லை டி20 உலகக்கோப்பை அணியில் சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டு வரும் நிலையில், அவருக்கும், ஆஸ்திரேலிய டி20 தொடரில் சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட்டுக்கும் அணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
சுப்மன் கில் அல்லது ஜெய்ஸ்வால் ரன் குவித்து இருந்தால் கூட ருதுராஜ் நீக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவருமே டக் அவுட் ஆனார்கள். சூர்யகுமார் யாதவ் 56, ரிங்கு சிங் 68* ரன்கள் எடுத்ததால் இந்திய அணி 180 ரன்கள் எடுத்தாலும், துவக்க வீரர்கள் சரியாக ஆடி ரன் குவித்து இருந்தால் ரிங்கு சிங் விக்கெட் வீழ்ச்சியின் அழுத்தம் இன்றி ஆடி இருப்பார். கடைசி ஓவர்களில் இறங்கி அதிரடி காட்டி இருப்பார். ஆனால், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருக்கிறது. அதனால், டிராவிட் எடுத்த முடிவு தவறு என ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.