கேபெர்ஹா : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
தென்னாப்பிரிக்க கேப்டன் டாஸ் வென்ற போதே இந்தப் போட்டி தென்னாப்பிரிக்க அணிக்கு சாதகமாக மாறியது. இரண்டாம் பாதியில் பந்து வீசிய இந்திய அணி ஈரமான பந்தை வைத்துக் கொண்டு போராடி, சரியாக பந்து வீச முடியாமல் தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டிக்கு முன்னதாக மழை பெய்தது. அதன் பின் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதற்கு காரணம், இரண்டாம் பாதியில் இரவு நேரத்தில் அதிக ஈரப்பதம் இருக்கும் என்பதால் பந்து வீச கடினமாக இருக்கும் என்பதே.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சூர்யகுமார் 56 எடுத்தார். ரிங்கு சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்து இருந்தார். இந்திய அணி 19.3 ஓவரில் 180 ரன்கள் சேர்த்தது. அப்போது மீண்டும் மழை வந்ததால் அத்துடன் இந்தியாவின் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
இரண்டாம் பாதிக்கு முன்பும் மழை வந்ததால் பிட்ச்சை சுற்றி இருந்த அவுட் பீல்டு முழுவதும் ஈரமாக இருந்தது. அதனால், பந்து விரைவாக ஈரமாக மாறியது. அதன் பின் இந்திய பந்துவீச்சாளர்களால் சரியாக பந்து வீச முடியவில்லை. ஸீம் பவுலிங், ஸ்விங் பவுலிங் என எதுவும் வேலை செய்யவில்லை. பல பந்துகள் வைடாகவும், லெக் திசையிலும் சென்றது.
அதை பயன்படுத்தி தென்னாப்பிரிக்க வீரர்கள் எளிதாக ரன் குவித்தனர். துவக்க வீரர் ரீஸா ஹென்ரிக்ஸ் 27 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார். மார்கிரம் 17 பந்துகளில் 30 ரன்களும், மில்லர் 12 பந்துகளில் 17 ரன்களும் குவித்தனர். இந்திய அணி 4 விக்கெட்களை வீழ்த்திய போதும், ஸ்டப்ஸ், ஆன்டில் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து ஆடி 13.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டச் செய்தனர்.
இந்திய அணி வீரர்கள் கடைசி வரை ஈரமான பந்தை துடைத்துப் பார்த்தும் எந்த பலனும் இல்லை. 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி பேட்டிங்கில் கூடுதலாக 20 ரன்கள் எடுத்து இருந்தால் இந்த கடினமான சூழ்நிலையில் பந்து வீசி வெற்றி பெற்று இருக்கலாம். அந்த வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டது.