சண்டிகர்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் குயின்டன் டி காக் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை, கடைசி நேரத்தில் டோனோவன் ஃபெரேரா மற்றும் டேவிட் மில்லர் ஜோடி பெரிய ஸ்கோராக மாற்றியது. இவர்களின் கூட்டு முயற்சியால் தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை குவித்துள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த இந்திய அணிக்கு, தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை வானவேடிக்கை காட்டினர்.

தொடக்க வீரர் குயின்டன் டி காக் இந்திய பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்தார். 46 பந்துகளில் 5 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 90 ரன்கள் குவித்த அவர், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அவர் அவுட் ஆனதும் ரன் வேகம் குறையும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், 5-வது விக்கெட்டுக்கு இணைந்த டோனோவன் ஃபெரேரா மற்றும் டேவிட் மில்லர் ஜோடி இந்திய பந்துவீச்சாளர்களைப் புரட்டி எடுத்தது. அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா வீசிய ஓவர்களில் சிக்ஸர்கள் பறந்தன. 20 ஓவர்கள் முடிவில் டோனோவன் ஃபெரேரா 16 பந்துகளில் 30 ரன்கள் (1 பவுண்டரி, 3 சிக்ஸர்) எடுத்து இருந்தார். டேவிட் மில்லர் 12 பந்துகளில் 20 ரன்கள் (2 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்து நாட் அவுட் ஆக இருந்தார்.
இந்த ஜோடி வெறும் 23 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து, அணியின் ஸ்கோரை 213-க்கு உயர்த்தியது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இன்று ரன்களை வாரி வழங்கினர். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்தார். (எகானமி 13.50). ஜஸ்பிரித் பும்ரா 4 ஓவர்கள் வீசி 45 ரன்கள் கொடுத்தார். (எகானமி 11.20)
வருண் சக்கரவர்த்தி மட்டுமே சிறப்பாகப் பந்துவீசினார். அவர் 4 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா மொத்தம் 22 எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதில் 16 வைடுகள் ஆகும்..