கேபெர்ஹா : தென்னாப்பிரிக்க அணியின் சுழற் பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்திய பின் ஷூவை எடுத்து போன் செய்வது போல சைகை செய்தது அவரை அவமரியாதை செய்வது போல இருந்தது.
முன்பு ஒரு முறை பாகிஸ்தான் வீரருக்கு எதிராக ஷம்சி ஷூவை கழற்றிய போதும் அவர் அவமரியாதை செய்ததாக சர்ச்சை எழுந்தது. தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு செயலை செய்து இருக்கிறார் ஷம்சி.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே நடந்த இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி 5.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஜோடி கூட்டணி அமைத்து ஆடி அணியை மீட்டது. சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து இருந்தார்.
அவர் 56 ரன்கள் சேர்த்த நிலையில், தென்னாப்பிரிக்க அணியின் சுழற் பந்துவீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஷம்சி தன் ஷூவை கழற்றி கையில் எடுத்தார். அதை வைத்து போன் பயன்படுத்துவது போல சைகை செய்தார்.
இதை பார்த்த போது சூர்யகுமாரை அவமரியாதை செய்கிறாரா? என்ற கேள்வி எழுந்தது. அந்த காட்சி தொலைக்காட்சியில் காட்டப்பதாததால் பெரிய சர்ச்சை ஆகவில்லை. ஆனால், ஷம்சி இதை வழக்கமாக பல போட்டிகளிலும் செய்து வருகிறார்.
இது குறித்து அவர் இதற்கு முன் விளக்கம் அளிக்கும் போது சில சமயம், அவுட் குறித்து சந்தேகம் எழுந்தால் களத்தில் இருக்கும் அம்பயர், மூன்றாவது அம்பயருக்கு வாக்கி டாக்கி மூலம் பேசுவார். அதே போல தான் விக்கெட் எடுக்கும் போது எந்த சந்தேகமும் இன்றி விக்கெட் வீழ்த்தப்பட்டது என்பதை குறிக்கும் வகையில் ஷூவை கழற்றி அம்பயரிடம் பேசுவது போல சைகை செய்வதாக கூறினார்.
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஷூவை கழற்றி காட்டுவது அவமரியாதை செய்யும் செயலாக கருதப்படும் நிலையில், ஷம்சி தன் செயலுக்கு போன் செய்கிறேன் என வேறு ஒரு விளக்கம் வைத்துள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 19.3 ஓவர்களில் 180 ரன்கள் குவித்தது. பின்னர் மழை வந்ததால் தென்னாப்பிரிக்கா அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் என வெற்றி இலக்கி நிர்ணயிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா அணி 13.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.