சண்டிகர்: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கிய நிலையில், தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மட்டும் தனி ஒருவனாக மிரட்டினார். குறிப்பாக, தென்னாப்பிரிக்க தொடக்க வீரர் ரீசா ஹென்ரிக்ஸை அவர் மீண்டும் ஒருமுறை தனது சுழலில் சிக்க வைத்து, தனக்கு விருப்பமான விக்கெட் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. குயின்டன் டி காக் இந்திய பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்க, வருண் சக்கரவர்த்தி மட்டும் தென்னாப்பிரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.

பவர்-பிளேயின் 5-வது ஓவரை வீச வந்தார் வருண் சக்கரவர்த்தி. அதுதான் அவரது முதல் ஓவர் மற்றும் முதல் பந்து. ஸ்ட்ரைக்கில் ரீசா ஹென்ரிக்ஸ் நின்றார். வருண் வீசிய அந்த 'கேரம் பால்', சற்றும் எதிர்பார்க்காத வேகத்தில் பிட்ச் ஆகி உள்ளே திரும்பியது.
புல் ஷாட் ஆட முயன்ற ஹென்ரிக்ஸ் ஏமாந்துபோக, பந்து நேராக ஸ்டம்பை பதம் பார்த்தது. 10 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த அவர், வருணைப் பார்த்ததுமே விக்கெட்டை பறிகொடுத்துவிட்டு நடையைக் கட்டினார்.
ரீசா ஹென்ரிக்ஸுக்கு வருண் சக்கரவர்த்தி என்றாலே பதற்றம் ஆவார் என்பது புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது. டி20 கிரிக்கெட்டில் இவர்கள் சந்தித்த புள்ளிவிவரம் இதுதான்:
இன்னிங்ஸ்: 3
சந்தித்த பந்துகள்: 7
எடுத்த ரன்கள்: 5
விக்கெட்டுகள்: 3
அதாவது, வருண் சக்கரவர்த்திக்கு எதிராக ஹென்ரிக்ஸ் 3 இன்னிங்க்ஸ்களில் 7 பந்துகளை சந்தித்து இருக்கிறார். அதில் 3 முறை அவரிடம் அவுட் ஆகியுள்ளார். சராசரியாக ஒவ்வொரு 2 பந்துக்கும் ஒருமுறை அவர் வருணிடம் விக்கெட்டை இழந்து இருக்கிறார்.
ஹென்ரிக்ஸ் வெளியேறினாலும், மறுமுனையில் குயின்டன் டி காக் ருத்ர தாண்டவம் ஆடினார். அர்ஷ்தீப் சிங், பும்ரா, ஹர்திக் பாண்டியா என யாரையும் அவர் விட்டுவைக்கவில்லை. அவர் 46 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
இந்தியத் தரப்பில் வருண் சக்கரவர்த்தி மட்டுமே ஆறுதல் அளித்தார். அவர் ஹென்ரிக்ஸை மட்டுமல்லாமல், கேப்டன் எய்டன் மார்க்ரம் (29) விக்கெட்டையும் வீழ்த்தினார். 16 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்து இமாலய ஸ்கோரை நோக்கிச் சென்றது.