ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு.. வெற்றிகரமான தோல்வி என்ற நிலையில் உள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு இந்தியா 240 ரன்களை நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்க அணி 118 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோருடன் 4வது நாள் ஆட்டத்தை தொடங்க இருந்தது.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக ஜோகனஸ்பர்கில் கன மழை கொட்டியது. இதனால் இன்றைய ஆட்டம் கைவிடப்படும் நிலை உருவானது

மழையும், மேகமும் கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்ட, ஆடுகளத்தில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் மைதான ஊழியர்கள் ஈடுபட்டனர். ஏனென்றால் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி பாதிக்க கூடாது அல்லவா.. பெரிய இயந்திரங்களை வைத்து ஈரமான பகுதியை உலர்த்தும் பணியில் ஈடுபட்டனர்
இதனால் முதல் மற்றும் 2வது பகுதி ஆட்டம் மழையால் தடைப்பட்டது. கிட்டதட்ட 60 ஓவர்களுக்கு மேல் வீச முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், சற்று முன்பு ஆட்டம் தொடங்கப்பட்டது. மழை பெய்து இருப்பதால், வேகப்பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், அப்படி எந்த ஒரு சம்பவமும் நிகழ வில்லை. மாறாக மெதுவாக விளையாடி கொண்டிருந்த தென்னாப்பிரிக்க வீரர்கள், அதிரடி ஆட்டத்தை தொடங்கிவிட்டனர். நாளைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? அதனால் இன்றே போட்டியை முடிக்கும் உத்வேகத்துடன் விளையாடி வருகின்றனர். 50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது.