மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் பயிற்சியாளர் கம்பீரையும் தேர்வு குழு தலைவர் அகர்காரையும் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
489 ரன்ளை தென்னாபிரிக்க அணி நிர்ணயித்த போதே இந்திய அணி பவுலிங் தேர்வில் தவறு செய்து விட்டதாக விமர்சனம் எழுந்தது. நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதில் ஆகாஷ் தீப் போன்ற வேகப்பந்துவீச்சாளரை பிளேயிங் லெவனில் பயன்படுத்திருக்கலாம். இல்லையென்றால் முகமது ஷமியை இந்திய அணி தேர்வு செய்து இருக்கலாம். இதன் மூலம் பந்துவீச்சில் ஒரு பெரிய மைனஸை தேர்வு குழுவும் பயிற்சியாளரும் செய்து இருக்கின்றனர்.

அதேபோன்று கில் இல்லாததும் மிகப்பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு ஏற்படுத்தியிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த தருணத்தில் கில் இந்த போட்டியில் விளையாடியிருந்தால் நிச்சயம் இந்தியாவுக்கு அது பக்க பலமாக மாறி இருக்கும்.
ஆனால் கில் தேவையே இல்லாமல் டி20 கிரிக்கெட்டில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து அவருக்கு ஓய்வு தரப்படாததால் அவருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாக ரசிகர்கள் குறை கூறியுள்ளனர். முன்கூட்டி சரியான திட்டத்தை தேர்வு குழுவும் பயிற்சியாளரும் செய்யாததே கில் தற்போது இந்திய அளவில் இடம்பெறாமல் போனதற்கு காரணமாகிவிட்டதாக அவர்கள் குறை கூறியுள்ளனர்.
இதே போன்று சர்பராஸ்கான் போன்ற திறமை வாய்ந்த வீரர் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு வாய்ப்பு தரப்படாதது ஏன் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே விளையாடும் சர்பராஸ் கான் அணியில் சேர்த்து இருந்தால் இந்த பிரச்சனையை வந்திருக்காது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பேட்டிங் வரிசையை அடிக்கடி கம்பீர் மாற்றி வருவதும் வீரர்களுக்கு நிலையற்ற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக முதல் டெஸ்டில் மூன்றாவது வீரராக வாஷிங்டன் சுந்தர் களமிறங்கிய நிலையில் தற்போது அவர் கீழ் வரிசையில் விளையாடுகிறார். அனுபவ வீரரான கருண் நாயர், இங்கிலாந்து தொடரில் சரியாக விளையாடவில்லை என்று நீக்கப்பட்டார்.
ஆனால் தற்போது அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் 5 போட்டிகளில் மொத்தமாக 602 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம், இரண்டு அரை சதம் அடங்கும். இதேபோன்று பாபா அபரஜித்,ஷேக் ரசித், யாஸ் தூல், ரஜத் பட்டிதார் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் அவர்களை வைத்து தனியே டெஸ்ட் அணியை உருவாக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதே போன்ற தவறை தொடர்ந்து செய்வதன் மூலம் கம்பீர் டெஸ்ட் போட்டிக்கு பயிற்சியாளராக இருக்க தகுதியற்றவர் என்றும், இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.