கவுகாத்தி: இந்திய அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட் 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
பொதுவாக இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டி காலை 9:30 மணிக்கு தொடங்கும். 11:40 மணி வரை முதல் செஷன் நடைபெறும். அதன் பிறகு 40 நிமிடம் மதிய உணவு இடைவெளி எடுத்துக் கொள்ளப்படும். இதை எடுத்து 12:20 லிருந்து 2 :10 மணி வரை இரண்டாவது செஷனும், 2:30 மணியிலிருந்து 4.30 மணி வரை மூன்றாவது செஷனும் நடைபெறும்.

இந்த நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி நேரம் அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. பொதுவாக டெஸ்ட் போட்டியில் மதிய உணவு நேரம் தான் முதலில் வரும். ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் தேநீர் இடைவேளையை முதலில் வைத்துவிட்டு, மதிய உணவு நேர இடைவெளியை இரண்டாவதாக மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதற்கு காரணம் கவுகாத்தி இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருக்கிறது. இங்கு சூரியன் விரைவாக உதித்து, விரைவாக மறைந்துவிடும். இதனால் இயற்கையான சூரியன் வெளிச்சம் வேண்டும் என்பதற்காக போட்டியை 9 மணிக்கெல்லாம் தொடங்க பிசிசிஐ முடிவெடுத்து இருக்கிறது. இதன்படி 9 மணியிலிருந்து 11 மணி வரை முதல் செஷனும், அதன் பிறகு உணவு இடைவெளியை எடுத்துக் கொள்ளாமல் தேநீர் இடைவேளையை 11 மணியிலிருந்து 11 :20 மணி வரை எடுத்துக் கொள்ளவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதனை அடுத்து இரண்டாவது செஷன் 11: 20 இல் இருந்து 1:20 மணி வரை நடைபெறுகிறது. இதன் அடுத்து மதிய உணவு நேர இடைவெளி 1:20 லிருந்து 2 மணி வரை எடுத்துக் கொள்ளப்படுகிறது இதனை அடுத்து மூன்றாவது செஷன் 2 மணியிலிருந்து நான்கு மணி வரை எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
இதன் மூலம் வெயில் வெளிச்சம் இருக்கும் போது போட்டியின் பெரும்பான்மையான பகுதியை நடத்த முடியும். இதன் காரணமாக தேனீர் இடைவேளை முதலிலும் உணவு இடைவேளை இரண்டாவதாகவும் மாற்றப்படுகிறது. உணவு இடைவெளியையும் தேநீர் இடைவேளையையும் மாற்றி இருப்பது வரலாற்றின் முதல் முறை என கூறப்படுகிறது.