கவுஹாத்தி: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளதால் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்கியுள்ளது.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் விரிக்கும் வலையில் இந்தியா சிக்கிக் கொள்ளக் கூடாது என முன்னாள் இந்திய அணி கேப்டன் அணில் கும்ப்ளே எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இரண்டாவது நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி முதல் செஷனில் விக்கெட் ஏதும் விழாமல் வெறும் 69 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, தென்னாப்பிரிக்க அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர்கள் டிரா செய்தால் கூட பிரச்சனை கிடையாது.
ஆனால் இந்தியாவுக்கு அப்படி அல்ல. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டும். இதன் காரணமாக இந்திய அணி கொஞ்சம் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும். தென்னாப்பிரிக்கா தற்காப்புக்காக விளையாடுகிறது என்பதால் நீங்களும் தற்காப்பு ஆட்டத்திற்கு சென்று விடாதீர்கள். தென்னாபிரிக்க அணி ஒரு செஷனில் 60 ரன்கள் கூட குவிக்கலாம்.
ஏனென்றால் அவர்கள் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் நாம் வெற்றி பெற வேண்டும். இதற்காக விக்கெட்டுகளை எடுக்க என்னென்ன வழியோ அதை பின்பற்றுங்கள் தென்னாப்பிரிக்கா எவ்வளவு ரன்கள் குவிக்கிறதோ அதனை கொஞ்சம் வேகமாகவும், அதிகமாகவும் குவிக்க வேண்டும். அப்போதுதான் இந்திய அணியால் இந்த போட்டியில் வெற்றி பெற முடியும்.
இல்லையென்றால் இந்த போட்டி சமனில் முடிவடைந்து தொடரை தென்னாப்பிரிக்கா வென்று விடும் என்று அணில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த ஸ்டெயின், தென்னாப்பிரிக்க அணி மெதுவாக ரன் குவிக்கிறது என நினைக்க வேண்டாம். பும்ரா, சிராஜ் அதிக ஓவர்கள் வீசிவிட்டார்கள். இதனால் இனி சுழற் பந்துவீச்சாளர்கள் தான் வீசப் போகிறார்கள் இதை பயன்படுத்திக் கொண்டு வேகமாக ரன்களை சேர்க்க தென்னாப்பிரிக்கா முயற்சி செய்யும். எனவே போட்டி இந்தியாவின் கையை விட்டு நழுவவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.