கவுஹாத்தி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாற்றத்தை கண்டு வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றியை பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடர் சமனாகும்.
ஒருவேளை இந்த போட்டி டிராவில் முடிவடைந்தால் கூட தென்னாபிரிக்க அணியே தொடரை கைப்பற்றும். இந்த தருணத்தில் கவுஹாத்தியில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து 489 ரன்கள் குவித்தது.

இதில் தமிழகத்தை பூர்விமாகக் கொண்ட சேனுரான் முத்துசாமி 109 ரன்கள் குவித்தார். மார்க்கோ ஜான்சன் 93 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் இந்திய அணி முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோரை குவிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.
அதற்கு அதிரடி வீரர் ஜெய்ஸ்வால் பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்ற நிலையில் இருந்தார். ராகுலும் நல்ல கம்பெனி கொடுத்தால், மட்டுமே இது சாத்தியமாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்த தருணத்தில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் என்ற ஸ்கோருடன் மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது.
நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 97 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இதைப் போன்று ராகுல் 63 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இருவருமே சுழற் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில்தான் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆடுகளமும் தற்போது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறி வருகிறது.
இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடக்க வீரர்கள் இருவரும் ஆட்டம் இழந்ததன் மூலம் இந்தியாவுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இந்த போட்டி சமனில் முடிவடைந்தாலே பெரிய விஷயம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.