கவுஹாத்தி: இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க உள்ளது. காரணம் பகல் நேர டெஸ்ட் போட்டிகளில் எப்போதுமே முதல் செஷன் முடிவடைந்த உடன் மதிய உணவு நேரம் எடுத்துக் கொள்ளப்படும்.
ஆனால் கவுஹாத்தியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் தேநீர் இடைவேளையும், இரண்டாவதாக தான் மதிய உணவு நேர இடைவேளையும் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. அது மட்டும் இல்லாமல் எப்போதும் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் டாஸ் 9 மணிக்கு வீசப்பட்டு, முதல் பந்து 9.30 மணிக்கு வீசப்படும்.

ஆனால் கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் டாஸ் 8.30 மணிக்கு வீசப்பட்டு முதல் பந்து 9:00 மணிக்கு வீசப்படும். இதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். இந்தியாவின் கிழக்கு திசையில் இருக்கும் பகுதி தான் கௌஹாத்தி. அசாம் மாநிலம் தலைநகரான இங்கு, சூரியன் மிக விரைவாக உதித்து, மிக விரைவாக மறைந்துவிடும்.
இதனால் போதிய வெளிச்சம் என்பது மாலை நேரத்தில் இருக்காது. இதனை சரி கட்டவே ஆட்டம் அரை மணி நேரம் முன்பாக தொடக்கப்படுகிறது. மேலும் மதிய உணவு நேர இடைவேளையை மாற்றி இருப்பதன் மூலம் பெருமளவு சூரியன் வெளிச்சத்தில் போட்டிகளை முடித்து விடலாம் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
கொல்கத்தா டெஸ்ட் போட்டிக்கு அமைக்கப்பட்ட ஆடுகளம் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் கவுஹாத்தி ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.இங்கு முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடக்க இருப்பதால் ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்ற போதுமான தரவுகள் இல்லை.
ஆனால் கொல்கத்தா ஆடுகளத்தை விட இந்த ஆடுகளம் கொஞ்சம் நன்றாக இருப்பதாகவும், இங்கு பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் என்றும் தெரிகிறது. ஆட்டத்தின் முதல் இரண்டு நாட்களில் பேட்டிங்கிற்கு சாதகமாகவும், அதன் பின் பந்து நன்றாக திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் போட்டி ஒன்பது மணிக்கு தொடங்கப்படுவதால் ஈரப்பதம் ஆடுகளத்தில் கொஞ்சம் இருக்கும் என்றும் இதனை பயன்படுத்திக் கொண்டு முதல் ஒரு மணி நேரத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.