மும்பை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற கட்டத்தில் இந்திய அணி விளையாடியது. கவுஹாத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி 489 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி வெறும் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 288 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 260 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து 549 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது.
ஜெய்ஸ்வால், ராகுல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க இந்திய அணி 27 ரன்களுக்கு இரண்டு விக்கெட் என்ற ஸ்கோருடன் கடைசி நாள் ஆட்டத்தை விளையாடியது. நைட் வாட்ச்மேன் ஆக களமிறங்கிய குல்தீப் யாதவ் 5 ரன்களில் ஆட்டம் இழக்க பயிற்சி ஆட்டங்களில் சதம் அடித்த துருவ் ஜூரல் வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே சேர்த்து ரசிகர்களை கடுப்பாக்கினார்.
இதனால் இந்திய அணி 42 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மறுமுனையில் சாய் சுதர்சன் பொறுமையான ஆட்டத்தை கடைப்பிடித்தார். இந்த கட்டத்தில் அணியின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான ரிஷப் பப்ட் களத்துக்கு வந்தார். அவர் அணியை காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
எனினும் ரிஷப் பண்டும் பெரிய அளவு தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 16 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில் அவர் பெவிலியன் திரும்பினார். சைமன் ஹார்மர் பந்துவீச்சில் அவர் மார்க்கமிடம் கேட்ச் ஆனார். சைமன் ஹார்மர் பந்தின் வேகத்தை முடிந்த அளவு குறைத்து வீசுவதன் மூலம் அது களத்தில் மேஜிக்கை நிகழ்த்துகிறது.
ஆனால் இந்திய வீரர்கள் இந்த விஷயத்தில் தவறு செய்து விட்டார்கள். இந்திய வீரர்கள் மணிக்கு 88 கிலோமீட்டர் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால், சைமன் ஹார்மர் மணிக்கு வெறும் 75 கிலோமீட்டர் வேகத்திற்கு தான் பந்தை வீசினார். இதனால் இந்திய அணி 58 ரன்கள் 5 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. இன்னும் இந்தியாவின் வெற்றிக்கு 491 ரன்கள் தேவைப்படும் நிலையில் போட்டியை கடுமையாக முயற்சித்து வருகிறது.