மும்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், காயமடைந்த கேப்டன் சுப்மன் கில்லுக்குப் பதிலாக, சிஎஸ்கே கேப்டனை அவசரமாகச் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒரு வலுவான பரிந்துரையை முன்வைத்துள்ளார்.
இந்திய அணியில் ஏற்கனவே இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக உள்ள நிலையில், மற்றொரு இடது கை வீரரைச் சேர்ப்பதற்குப் பதிலாக, அபார ஃபார்மில் உள்ள வலது கை வீரரை அணிக்குள் கொண்டு வருவதே புத்திசாலித்தனம் என்று அவர் கூறியுள்ளார்.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது, இந்தியக் கேப்டன் சுப்மன் கில்லின் கழுத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்ய வரவில்லை. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், கவுஹாத்திக்கு அணியுடன் பயணம் செய்வார் என்று கூறப்பட்டாலும், இரண்டாவது டெஸ்டில் அவர் பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை.
ஒருவேளை கில் விளையாடவில்லை என்றால், அவருக்குப் பதிலாக அணியில் ஏற்கனவே உள்ள சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல் ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்படுவார். ஆனால், இங்குதான் ஒரு சிக்கல் எழுகிறது. இந்திய அணியின் ஆடும் லெவனில் ஏற்கனவே ஆறு இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். சாய் சுதர்சன், படிக்கல் ஆகிய இருவரும் கூட இடது கை பேட்ஸ்மேன்களே. இதனால், ஏழு இடது கை வீரர்களுடன் களமிறங்கவுது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லும் விதமாக, ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் ஒரு யோசனையை முன்வைத்துள்ளார். "சுப்மன் கில் விளையாடுவது குறித்து இன்னும் தெளிவான முடிவு இல்லை. ஒருவேளை அவர் விளையாடவில்லை என்றால், நீங்கள் வேறு ஒருவரை ஆட வைக்க வேண்டும். வெளியே சாய் சுதர்சனும், தேவ்தத் படிக்கல்லும் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் இடது கை வீரர்கள். ஏற்கனவே அணியில் ஆறு பேர் இருக்கிறார்கள். நீங்கள் ஏழு இடது கை வீரர்களுடன் செல்ல விரும்புகிறீர்களா? ஒருவேளை அதை மாற்றி ஒரு வலது கை பேட்ஸ்மேனை சேர்க்க விரும்பலாம்" என்று அவர் கூறி இருக்கிறார்.
சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல்லுக்கு பதிலாக வலது கை பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட்டை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா ஆலோசனை கூறி இருக்கிறார்.
"அவர் (ருதுராஜ்) மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்தியா 'ஏ' அணிக்காக ரன்களைக் குவித்து வருகிறார். ரஞ்சி டிராபி, துலீப் டிராபி என எங்கு விளையாடினாலும் ரன் மழை பொழிகிறார். அவர் மிடில்-ஆர்டரிலும் பேட்டிங் செய்வார். டெக்னிக்கலாக மிகவும் நேர்த்தியாகத் தெரிகிறார். அவர் டெஸ்ட் போட்டிகளுக்காகவே உருவாக்கப்பட்டவர் போலத் தெரிகிறது."
"இதே கவுஹாத்தி மைதானத்தில்தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ருதுராஜ் டி20 சதம் அடித்தார். எனவே, சுப்மன் கில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், யோசிக்காமல் அவரை உடனடியாக அணியில் கொண்டு வர வேண்டும்" என்று ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
இந்த சீசனில் மகாராஷ்டிராவுக்காக ஆடிய ரஞ்சிப் போட்டிகளில் 91, 55*, 116, 36* என ரன் குவித்துள்ளார். சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த இரண்டு அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் போட்டிகளில், 117 மற்றும் 68* ரன்கள் விளாசி, தொடர்ச்சியாக இரண்டு ஆட்டநாயகன் விருதுகளையும் வென்றார். அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்குமா?