கேப் டவுன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் பல மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கிறது. இதனால் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பல அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதால் கேஎல் ராகுலை தொடக்க வீரராக கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் யோசனை வழங்கினார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கர், இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றால் இனி கே எல் ராகுல் நடுவரிசையில் தான் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று கூறி இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், கே எல் ராகுல் நடு வரிசையில் விளையாடுவதன் மூலம் அது இந்தியாவுக்கு பல நன்மைகளை கொடுத்திருக்கிறது.
அவர் ரன்களை நகர்த்தும் வீரராக இருக்கிறார். இந்திய அணிக்காக அவர் பல இடங்களில் விளையாடி இருக்கிறார். தற்போது கீழ் வரிசை வீரர்கள் மற்றும் பவுலருடன் இணைந்து விளையாட கூடிய தகுதி கேஎல் ராகுலுக்கு மட்டும் தான் இருக்கிறது. கேஎல் ராகுலை பொருத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்லாமல் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அவர் நடு வரிசையில் தான் விளையாட வேண்டும்.
இதையெல்லாம் பார்க்கும் போது இந்திய அணி இனி எதிர்காலத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் கே எல் ராகுல் நடு வரிசையில் ஆறாவது இடத்தில் தான் விளையாட வேண்டும். செஞ்சூரியன் மைதானத்தில் கேஎல் ராகுல் 2021 மற்றும் 2023 என இரண்டிலுமே சதம் அடித்திருக்கிறார். ஒரு இடத்தில் நாம் சிறப்பாக விளையாடிவிட்டால் அது தொடர்பாக நல்ல நினைவுகள் நம்முடன் இருக்கும்.
அதே மைதானத்திற்கு நாம் திரும்பி செல்லும் போது நமது நம்பிக்கை அதிகரிக்கும் என்று சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். விக்கெட் கீப்பர் ரிசப் பண்ட், தற்போது காயம் காரணமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத நிலையில் கே எல் ராகுல் தான் அந்த பணியை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.