கவுஹாத்தி: இந்தியா, தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுஹாத்தியில் சனிக்கிழமை தொடங்கியது. கொல்கத்தா ஆடுகளம் கடும் விமர்சனத்தை சந்தித்த நிலையில், கவுதாத்தியின் ஆடுகளம் எவ்வாறு அமைக்கப்பட போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் முந்தைய போட்டிக்கு பயன்படுத்திய ஆடுகளத்தை விட இது சிறப்பாகவே செயல்பட்டது. பேட்ஸ்மேன் பவுலர்கள் என இருவருமே கடுமையாக உழைத்து ரன்களையும் விக்கெட்டுகளையும் எடுத்தனர். டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

தொடக்க வீரர் எய்டன்ட் மார்க்கரம் நான்கு ரன்கள் இருந்தபோது ராகுல் அழகான ஒரு கேச்சை தவறவிட்டார். எனினும் இதனை பயன்படுத்திக்கொண்டு எய்டன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கல்டன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்தனர்.
முதல் நாள் தேனீர் இடைவெளியின் போது பும்ரா வீசிய பந்தில் ஏய்டன் மார்க்கரம் கிளீன் போல்ட் ஆனார். மார்க்கரம் 38 ரன்களில் ஆட்டம் இழக்க, ரியான் ரிக்கல்டன் 35 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு பவுமா மற்றும் டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்தனர்.
சிறப்பாக விளையாடிய பவுமா 42 ரன்கள் ஆட்டம் இழக்க, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஒரு ரன்னில் அரை சதத்தை தவறவிட்டார். இதேபோன்று ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் டோனி டிசோர்சி 28 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க,வியான் முல்டர் 13 ரன்களில் வெளியேறினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.
இந்திய பந்துவீச்சில் குல்தீப் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த பும்ரா, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் எந்த அணி அதிக ஸ்கோர் குவிக்கிறதோ அவர்கள் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியாவின் கிழக்கு மாநிலமான அசாமில் நடைபெறுவதால், சூரியன் மிக விரைவாக உதிக்கும், மறையும். இதன் காரணமாக ஆட்டம் அரை மணி நேரம் முன்ப தொடங்கிய நிலையில் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்க்ய் முன்பு தேனீர் இடைவேளை எடுத்துக் கொள்ளப்பட்டது.