கவுஹாத்தி: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், 'போதிய வெளிச்சமின்மை' (Bad Light) காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் வெர்னான் பிலாண்டர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பங்கள் இருந்தும், அம்பயர்கள் எடுக்கும் முடிவுகளில் இன்னும் தெளிவு இல்லை என்றும், குறிப்பாக ஒரு விக்கெட் விழுந்தவுடன் ஆட்டத்தை நிறுத்துவது வாடிக்கையாகிவிட்டது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

கவுஹாத்தி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ், தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி ஜோர்ஸியின் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த விக்கெட் விழுந்த உடனேயே, களத்திலிருந்த அம்பயர்கள் ஒன்றுகூடி, போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி அன்றைய ஆட்டத்தை முடித்துக்கொண்டனர்.
இது குறித்து பேசிய பிலாண்டர் கூறியிருப்பதாவது, "இது எப்போதும் நடப்பது போலவே தெரிகிறது. எப்போதெல்லாம் ஒரு விக்கெட் விழுகிறதோ, அப்போதெல்லாம் அம்பயர்கள் ஒன்று கூடி அன்றைய ஆட்டத்தை முடித்துவிடுகிறார்கள். ஒரு பேட்ஸ்மேனாக இது மிகவும் ஏமாற்றமளிக்கும் விஷயம். ஏனெனில், எந்த நேரத்தில் அம்பயர்கள் 'வெளிச்சம் போதவில்லை' என்று கூறுவார்கள் என்பதை யாராலும் கணிக்க முடிவதில்லை."
"இக்காலத்தில் வெளிச்சத்தை அளவிட 'லைட் மீட்டர்கள்' (Light Meter) வந்துவிட்டன. அப்படியிருந்தும் இதுபோன்ற முடிவுகளில் ஒரு தெளிவான வரைமுறை இல்லை. முடிந்தவரை இயற்கையான வெளிச்சத்தில் விளையாடுவதையே அனைவரும் விரும்புவார்கள். செயற்கை வெளிச்சம் அல்லது மங்கலான வெளிச்சம் வரும்போது அது பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாகிவிடுகிறது. இதில் அம்பயர்கள் இன்னும் கொஞ்சம் தெளிவுடன் செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
கவுஹாத்தி ஆடுகளத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஈடன் கார்டன் மைதானத்தைப் போல பேட்டிங் செய்வது மிகக் கடினமாக இல்லாவிட்டாலும், இந்தியப் பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
குறிப்பாகச் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தனது சுழலில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது துல்லியமான பந்துவீச்சால் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார்.
நாள் முடிவில் புதிய பந்தைக் கையில் எடுத்த முகமது சிராஜ், சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டோனி டி ஜோர்ஸியை வெளியேற்றினார். அந்த விக்கெட் விழுந்த கையோடு ஆட்டம் நிறுத்தப்பட்டது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து இருக்கிறது.