கவுகாத்தி: இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தென்னாப்பிரிக்க அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய அணியில் பந்துவீச்சு சிறப்பாக இருந்தாலும், பேட்டிங் படு மோசமாக இருக்கிறது. இந்திய வீரர்களுக்கு ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள தெரியவில்லை. இந்த தருணத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் சுப்மன் கில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இதனால் ரிஷப் பண்ட் கேப்டனாக தொடர்வார் என்று தெரிகிறது.
இந்த தருணத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். கிட்டத்தட்ட முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே வீரர்கள் தான் இரண்டாவது டெஸ்டிலும் விளையாடுவார்கள் என தெரிகிறது. நான்கு சுழற் பந்து வீச்சாளர்களை கம்பீர் பயன்படுத்தியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், தற்போது அதை கம்பீர் மாற்ற மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.
தற்போது கில் காயம் காரணமாக வெளியேறி இருப்பதால் அவருக்கு பதில் யார் அந்த இடத்தை நிரப்ப போகிறார்கள் என்று தான் கேள்வி எழுந்துள்ளது. தமிழக வீரர் சாய் சுதர்சன் மாற்று வீரராக களமிறங்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் கம்பீர் ஆல்ரவுண்டரான நிதிஷ்குமார் ரெட்டியை பிளேயிங் லெவனுக்கு கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார்.
இது மேலும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தும் ஒரு முடிவாகும். ஏற்கனவே பேட்டிங் சரியாக இல்லாத நிலையில் சாய் சுதர்சன் உள்ளே வருவது சிறப்பான விஷயமாக இருக்கும். ஆனால் ஏற்கனவே இருக்கும் பந்துவீச்சாளர்களுக்கு வேலை இல்லாத நிலையில் தற்போது கூடுதலாக ஒரு ஆல் ரவுண்டர் தேவையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.