கட்டாக்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை செவ்வாய்க்கிழமை ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறுகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட வீரர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்த அணியில் துணை கேப்டனாக காயம் காரணமாக அண்மையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விலகி இருந்த கில் அணிக்கு திரும்பி இருக்கின்றார். இந்த நிலையில் டி20 அணியில் ஒரு இடத்திற்கு மூன்று இந்திய வீரர்கள் போட்டி போடுகிறார்கள். இதனால் யாரை தேர்வு செய்வது என்று கேப்டன் சூரியகுமார் யாதவும் குழம்பிப் போய் இருக்கின்றார்.

ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பிருப்பதால் அவர் ஐந்தாம் இடத்தில் விளையாடுகிறார். இதேபோன்று அக்சர் பட்டேல் 6வது இடத்தில் விளையாடுகிறார். ஏழாம் இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜித்தேஷர்மா அல்லது சஞ்சு சாம்சன் இருவரும் போட்டி போடுகிறார்கள். இந்த நிலையில் எட்டாவது இடத்திற்கு தான் யாரை தேர்வு செய்வது என்று சூரியகுமார் யாதவ் குழம்பிப் போய் உள்ளார்.
இந்திய அணி எப்போதுமே டி20 போட்டிகளில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் குல்தீப்பை தேர்வு செய்வதா? இல்லை வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்வதா என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. குல்திப் யாதவ் அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இதனால் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என தெரிகிறது. ஆனால் குல்தீப் யாதவ் அந்த இடத்திற்கு வந்தால் இந்திய அணியின் பேட்டிங் வரிசை வெறும் ஏழு பேருடன் நின்று விடும். இதனால் வாஷிங்டன் சுந்தருக்கு முன்னுரிமை வழங்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் பேட்டிங் பலத்தை அதிகரிக்க முடியும். அது மட்டுமில்லாமல் வாஷிங்டன் சுந்தரிடம் இரண்டு அல்லது மூன்று ஓவர்களை பெற்றுக் கொள்ளலாம். நிலைமை இப்படி இருக்க இந்தியாவின் இரவு நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் சுழற் பந்துவீச்சாளர்கள் கடுமையாக தடுமாறுகிறார்கள். இதனால் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை பயன்படுத்தலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சமீப காலமாக பந்துவீச்சில் சிவம் துபே கலக்கி வருகிறார். மேலும் பேட்டிங்கில் அவர் இருந்தால் நடுவரிசை பலம் மேலும் அதிகரிக்கும். இதனால் சிவம் துபே அணியில் தேர்வு செய்யலாமா என்று அணி நிர்வாகம் யோசித்து வருகின்றனர். இதனால் ஒரே இடத்திற்கு மூன்று பேர் போட்டி போடுவதால், என்ன முடிவு இந்திய அணி எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.